கோலாலம்பூர்: இந்தோனீசியாவின் கலிமந்தானில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மலேசியாவில் 13 இடங்களில் தீ ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்தோனீசியக் காட்டுத் தீயினால் மலேசியாவில் காற்றுத் தரம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) மிகவும் மோசமடைந்துள்ளது. சுற்றுச்சூழல் துறை தரவின்படி, நாட்டின் 68 கண்காணிப்பு நிலையங்களில் எந்தவொரு இடத்திலும் நல்ல காற்றுத் தரம் பதிவாகவில்லை. சரவாக்கில் காற்றுத் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளின்படி கலிமந்தானில் 1,180, சுமத்ராவில் 18, மலேசியாவில் 13 இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் துறை துணைத் தலைமை இயக்குநர் அஸூரி அஸீஸா சைடூன் தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள ஆசியான் சிறப்பு வானிலை மையம் இத்தரவுகளை ஆய்வு செய்தது.
தெற்கு ஆசியான் பகுதியின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. மேற்கு கலிமந்தானில் உருவான அடர்ந்த புகைமூட்டம் சரவாக்கின் மேற்குப் பகுதிக்கு நகர்கிறது. நிலைமை மோசமடைந்ததால், ஆகஸ்ட் 27 முதல் தெற்கு ஆசியானுக்கு ‘எச்சரிக்கை நிலை 3’ அறிவிக்கப்பட்டது.


