ஓடுவதால் ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறும் பெண்

ஓடுவதால் ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறும் பெண்

1 mins read
adf1023f-f115-4f9c-bd8d-9b8eb801d92a
-

கனடாவைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், ஓடுவதால் தமக்கு ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறியிருக்கிறார். விமானப் பயணம் ஒன்றுக்கு விரைந்து சென்றதால் தாம் உயிர் இழந்திருக்கலாம் என்று அவர் சொன்னார்.

ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தில், டிவ்ஸி மங்காட் அவரது சகோதரியுடனும் நண்பர்களுடனும் டொமினிக்கன் குடியரசுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். விமானப் பயணத்திற்குத் தாமதமானதால், அவர் வேகமாக ஓடினார். அதனைத் தொடர்ந்து, அவருக்குக் கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டது.

நுழைவாசலைச் சென்றடைந்ததும், தோல் அரிப்பும் கொப்புளங்களும் ஏற்பட்டதாகக் கூறிய குமாரி மங்காட், தாம் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும் சொன்னார். முதலில் சில மாத்திரைகளை உட்கொண்ட அவர், அவை பயனளிக்காமல் போனதால் 'எபிபென்' எனும் ஊசியைப் போட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வீக்கம் குறைந்ததாகக் குமாரி மங்காட் கூறினார்.

அவரது சகோதரி முழு நிகழ்வையும் காணொளியில் பதிவுசெய்திருந்தார். அது டிக்டாக்கில் வேகமாகப் பரவியது.

குமாரி மங்காட், கடந்த சில மாதங்களில் தாம் ஓடியபோது அல்லது மன உளைச்சலை எதிர்நோக்கியபோது தமக்குத் தோல் அரிப்பு ஏற்பட்டதாகக் கூறினார். அது ஓடுவதால் ஏற்படுகின்றதா, மன உளைச்சலால் ஏற்படுகின்றதா என்று முதலில் தமக்குத் தெரியவில்லை என்றார் அவர். ஆனால், ஓடும்போதும், மன உளைச்சலை எதிர்நோக்கும்போதும்தான் தமக்கு ஒவ்வாமை ஏற்படுவதை, அந்நாளன்று உறுதிசெய்ததாக அவர் கூறினார்.

இதன் தொடர்பில் சில முறை மருத்துவமனைக்குச் சென்றிருப்பதாகவும், தற்போதைக்கு மருத்துவமனையால் கூடுதல் தகவல்களைக் கொடுக்கமுடியவில்லை என்றும் குமாரி மங்காட் தெரிவித்தார்.