சோல்: உலக நாடுகளின் ராணுவச் செலவினங்கள் கடந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஸ்டோக்ஹல்ம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் வெளியிட்ட அதன் வருடாந்திர அறிக்கை மூலம் இத்தகவல் கிடைத்துள்ளது.
ரஷ்யா-உக்ரேன் போர், காஸா போர் ஆகியவற்றால் ஆயுதங்கள் பேரளவில் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் உலகளாவிய நிலையில் ராணுவச் செலவினம் 2.718 டிரில்லியனாகப் பதிவானது.
இது ஆண்டு அடிப்படையில் 9.4 விழுக்காடு அதிகரிப்பு.
உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஆயுதங்களை கொள்முதல் செய்வது முடிவதாகத் தெரியவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல நாடுகள் அவற்றின் ராணுவச் செலவினத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் விளைவாக அடுத்த சில ஆண்டுகளில் உலகளாவிய நிலையில் இது உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ராணுவச் செலவினத்தைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளைவிட அமெரிக்காதான் பேரளவில் செலவு செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டில் அதன் ராணுவச் செலவினம் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்.
இரண்டாவது நிலையில் சீனா உள்ளது.
அதன் ராணுவச் செலவினம் $314 பில்லியன் அமெரிக்க டாலர்.
2024ஆம் ஆண்டில் சீனா அதன் அணுவாயுத ஆற்றலைத் தொடர்ந்து மிக விரைவாக விரிவுபடுத்தியதாக அறிக்கை தெரிவித்தது.
உலக நாடுகளின் மொத்த ராணுவச் செலவினத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவின் ராணுவச் செலவினம் கிட்டத்தட்ட 50 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலின் ராணுவச் செலவினம் 2024ஆம் ஆண்டில் 65 விழுக்காடு ஏற்றம் கண்டது.
உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் ரஷ்யாவின் ராணுவச் செலவினம் 38 விழுக்காடு அதிகரித்தது.

