வாஷிங்டன் - பாகிஸ்தானும் இந்தியாவும் போரைக் கைவிடும் வழிகளை ஆராயும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிரிடம் சனிக்கிழமை (மே 9) கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்கால பூசலைக் களைவது தொடர்பில் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா உதவ தயார் என்றும் திரு ரூபியோ சொன்னார்.
இதற்கிடையே, அணுவாயுத ஆற்றல் கொண்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரிப்பதால் இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி ஜி7 முக்கிய நாடுகள் வலியுறுத்தின.
இந்தியா மே 7ஆம் தேதி பாகிஸ்தான்மீது ஆகாயத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியதிலிருந்து பூசல் வலுத்துள்ளது. அந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
ஜி7 நாடுகளில், அமெரிக்கா, இந்தியாவோடும் பாகிஸ்தானோடும் அண்மையில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தும்படி வலியுறுத்தியது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரிஃபுடனும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடனும் ஏப்ரல் இறுதியிலிருந்து அடிக்கடி பேசியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இருநாடுகளுக்கும் இடையில் வளரும் பதற்றம் வெட்கக்கேடானது என்று சாடினார்.
அண்மை ஆண்டுகளில் சீனாவின் அதிகரிக்கும் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கத்திய வல்லரசுகள் இந்தியாவை முக்கிய பங்காளி நாடாகக் கருதுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் ஏப்ரல் 22ஆம் தேதி இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு காஷ்மீரில் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டித்தன.
இந்தியா அதற்குப் பாகிஸ்தானைக் குறைகூறியது. அதை மறுத்த பாகிஸ்தான் சமநிலையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.

