தோக்கியோ: உலகின் ஆகப்பெரிய அணுசக்தி ஆலையான ஜப்பானில் இருக்கும் காஷிவாஸாக்கி-கரிவா அணுசக்தி ஆலையின் முதல் அங்கத்தை வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி மீண்டும் செயல்பட வைக்க தோக்கியோ இலெக்ட்ரிக் பவர் (தெப்கோ) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தெப்கோ தலைவர் தோடோவாக்கி கோபயாக்காவா புதன்கிழமை (டிசம்பர் 24) இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஷிவாஸாக்கி-கரிவா அணுசக்தி ஆலை, நைகாட்டா வட்டாரத்தில் அமைந்துள்ளது. அதனை மீண்டும் செயல்பட வைக்க நைகாட்டா அரசாங்கம் இவ்வாரம் ஒப்புதல் அளித்தது.
இது, 2011ஆம் ஆண்டு ஜப்பானை நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதற்குப் பிறகு தெப்கோ மீண்டும் செயல்பாட்டுக்குவர இருக்கும் முதல் அணுசக்தி ஆலையாகும். அந்தப் பேரிடரில் தெப்கோவின் ஃபுக்குஷிமா டாய்ச்சி ஆலை முடங்கிப்போனது.

