சரவாக்: மலேசியாவின் கிழக்கில் உள்ள சரவாக் மாநிலம் புகைமூட்டத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போர்னியோ தீவில் உள்ள அம்மாநிலம் இந்தோனீசியாவின் கலிமந்தான் மாநிலத்துடன் அதன் எல்லையைப் பகிர்வதால் புகைமூட்டம் பேரளவில் அதனுள் ஊடுருவியுள்ளது.
சரவாக்கின் காற்றுத் தரநிலை சுகாதாரமற்ற ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
மிகவும் பரந்த தீபகற்பமான இந்தோனீசியா, பல வாரங்களாக அந்நாட்டின் பல பகுதிகளில் மூண்டுள்ள காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகிறது. மலேசியா, சிங்கப்பூர் உட்பட அதன் வட்டார நாடுகள் பலவற்றிலும் புகைமூட்டம் சுகாதாரப் பிரச்சினையாகக் கிளம்பியுள்ளது.
இதற்கிடையே செப்டம்பர் 3, 5 ஆகிய இரு தேதிகளில் செயற்கையாக மேகங்களுக்குள் மழையைத் தூண்டும் செயல்பாடுகள் நடைபெறும் என்று சரவாக் பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவர் டக்லஸ் உகா எம்பாஸ் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) தெரிவித்தார்.
வானிலையும் வளிமண்டல நிலவரமும் ஒத்துழைப்பதைப் பொறுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதையும் அவர் சுட்டினார்.
“செயற்கையாக மழையைத் தூண்டும் செயல்பாடு மேகங்கள் எவ்வாறு வானில் உருவாகின்றன என்பதையும் வளிமண்டல நிலவரத்தையும் கவனத்தில் கொண்டுதான் அமையும். வானில் அதற்கு உகந்த, தேவையான அளவு மேகங்கள் உருவாகவில்லை என்றால் அது சாத்தியமாகாது,” என்று அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.


