சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தற்காப்பு அமைச்சர் பொறுப்பை வகித்த கிம் யோங்-ஹியுன் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து திரு யூன், சவூதி அரேபியாவுக்கான தென்கொரியத் தூதர் சோய் பியுங்-ஹியுக்கை அடுத்த தற்காப்பு அமைச்சராக வியாழக்கிழமையன்று (டிசம்பர் 5) நியமித்தார். தென்கொரிய அதிபர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டது.
திரு கிம், செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 3) திரு யூன் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவராகப் பார்க்கப்பட்டவர். திரு கிம்தான் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்துமாறு திரு யூனுக்குப் பரிந்துரைத்தார் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திரு யூன் மீது வழக்கு தொடரும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலும் அந்த விவரம் குறிப்பிடப்பட்டது.
திரு சோயைத் தற்காப்பு அமைச்சராக நியமித்தது, ராணுவ ஆட்சி சட்டத்தை மீட்டுக்கொண்ட பிறகு திரு யூன் எடுத்திருக்கும் முதல் அதிகாரபூர்வ நடவடிக்கையாகும்.
திரு யூன் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியது, நாட்டுக்கு துரோகம் இழைக்கும் செயல் என்று தென்கொரியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி குறைகூறியுள்ளது. அதன் தொடர்பிலான வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமையன்றே (டிசம்பர் 6) நடத்தவும் அக்கட்சி முயற்சி செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.