கோலா குபு பாரு: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புக்கிட் அசா மலையில் மலையேற்றப் பயிற்சியின்போது காணாமல் போன 19 வயது இளம் பெண், நான்கு நாள்கள் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையன்று (மே 26) சடலமாக மீட்கப்பட்டார்.
நூர் இசாட்டி ஹுமைரா அசிசுலின் உயிரற்ற உடல் காலை 11.59 மணியளவில் மலையேற்றப் பாதையிலிருந்து சற்றுத் தொலைவில் தேடல், மீட்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
நூர் இசாட்டி கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து ஏறத்தாழ 500 மீட்டர் தூரத்திலும் சம்பவக் கட்டுப்பாட்டு முகாமிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் சடலம் கண்டறியப்பட்டது.
மீட்புப் படையினர் தூக்குப்படுக்கை பயன்படுத்தி அப்பெண்ணின் சடலத்தை 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு முகாமுக்குக் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் காவல் துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.

