அன்பு. அதை உணர்வதிலும் இன்பம், தருவதிலும் இன்பம். அத்தகைய மகத்தான தன்மையுடைய அன்பு, எல்லோரிடத்திலும் நமக்கு ஏற்படுவதில்லை. அவ்வாறு ஏற்படும்போது ஒவ்வொரு தினமும் நம் மனம் அவரைப் பற்றி நினைப்பதில் தொடங்கி அவரைப் பற்றி நினைப்பதிலேயே முடிந்துவிடும்.
நாளை அன்பர் தினம் அனுசரிக்கப்படுகிறது. காதலர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என வெவ்வேறு உறவுகள் கொண்டாடும் ஒரு சிறப்பை இந்தத் தினம் கொண்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் தங்களின் அன்பை வெளிப்படுத்தக் காணலாம்.
பொதுவாக ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள் கொடுத்துக் கொண்டாலும் ஐந்து வழிகளில் தங்களின் அன்பை மனிதர்கள் வெளிப்படுத்தலாம் என்று அமெரிக்க எழுத்தாளர் கேரி சாப்மென் தாம் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது, தொடுவது, இனிக்கும் வார்த்தைகளால் உறுதியளிப்பது, தேவையைப் புரிந்துகொண்டு அக்கறை காட்டுவது, அன்பளிப்புகள் வழங்குவது ஆகியவையே அந்த ஐந்து வழிகள் என்றார்.
அதற்கேற்ப தனக்குப் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் காதலிக்கு நேரத்தை ஒதுக்குவதே அன்பின் வெளிப்பாடு என்றார் 28 வயது சத்யா. தன் காதலியை விரைவில் மணந்துகொள்ள இருக்கும் இவர், இருவரும் இணைந்து அதிக நேரத்தைச் செலவிடும் வகையில் தங்களின் சந்திப்புகளை எப்போதும் திட்டமிடுவதாகச் சொன்னார்.
ஊக்கமும் உறுதியும் அளிக்கும் சொற்களைப் பரிமாறிக்கொள்வதும் கைகோர்த்து நடப்பதும் தங்களுக்கு இடையே உள்ள அன்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அன்பர் தினத்துக்கு ஆண்டுதோறும் தன் காதலிக்குத் தெரியாமல் திட்டமிட்டு அவரை வெளியே அழைத்துச் செல்வது இவருக்கு வழக்கமாகும். அதோடு காதலிக்குப் பிடித்தமான பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்தும் இவர் தன் அன்பை வெளிப்படுத்துவதுண்டு. இவ்வாறு செய்யும்போது காதலி முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தனக்கு மனநிறைவைத் தருவதாக அவர் குறிப்பிட்டார்.
காதல் என்பது மகிழ்ச்சி அளிக்கும் ஓர் உணர்வு என்றார் அவர். அன்புக்குரியவருடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாது என்றார். திருமண ஏற்பாட்டில் தற்போது ஈடுபட்டிருக்கும் இவர்கள், நாளைய அன்பர் தினத்தில் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவதை எதிர்பார்த்திருப்பதாக சத்யா பகிர்ந்துகொண்டார்.
பல்கலைக்கழக மாணவி சங்கீதா தம்முடைய அன்புக்குரியவருக்கு அன்பளிப்புகள் மட்டுமன்றி கடிதங்கள் எழுதியும் தருவதாகக் கூறினார்.
நண்பர்களும் குடும்பத்தினரும் துவண்டு போகும் நேரங்களில் அவர்களுக்குத் துணை நின்று உதவுவதன் மூலமும் ஒருவர் மீது இருக்கும் அன்பைக் காட்டலாம் என்றார் சங்கீதா. தான் அன்பு கொண்டோர் எத்தருணத்திலும் தனிமையை உணரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு எப்பொழுதும் போல நண்பர்களுடன் உணவு உண்டு அன்பர் தினத்தைக் கொண்டாட இருக்கிறார் சங்கீதா.
அன்புக்குரியவர்களுடன் கடற்கரை மணலில் பாதங்கள் புதையும் வண்ணம் நடந்து செல்வதில் ஓர் அலாதி இன்பம் சிலருக்கு உண்டு. கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சென்று நேரம் செலவிடுவதை அன்பின் வெளிப்பாட்டு மொழியாக பல்கலைக்கழக மாணவர் சஞ்சித் கருதுவதாகக் கூறினார்.
தம்முடைய காதலரின் தேவை அறிந்து உதவி செய்வதே அன்பை வெளிப்படுத்துவதற்கான வழி என்று கவி பகிர்ந்துகொண்டார். வேலைகள் அதிகம் இருக்கும்போது தேநீர் கலக்கிக் கொடுப்பது, பணியில் முடிந்தவரை உதவிக்கரம் நீட்டுவது போன்ற வழிகளில் ஒருவரது சுமை தெரியாது ஆறுதல் அளிக்கலாம், அக்கறை காட்டலாம் என்று இவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கை முழுக்க ஒருவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அவருடனே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாம் செய்யும் செயல்கள், அன்பைக் குறிக்கின்றன என்று கூறினார் கவி. அன்பர் தினத்தை மட்டும் சிறப்பித்துக் கொண்டாடுவதில்லை என்று கூறிய கவி, அன்புக்குரியவர்களுடன் செலவிடும் ஒவ்வொரு நாளுமே தனித்துவமானது என்று தெரிவித்தார்.
முதல்முறையாக இவ்வாண்டு அன்பர் தினத்தைத் தன் காதலருடன் கொண்டாட உள்ளார் மாணவி ஷ்ரேயா, 19. தேசிய சேவை புரியும் தன் காதலருடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போனதால் ஒன்றாக நேரம் செலவிடுவதைத் தான் விரும்புவதாகக் கூறினார்.
ஒன்றாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவது மூலமும் தன் அன்பை வெளிப்படுத்துவதாகச் சொன்னார் ஷ்ரேயா. காதலும் அன்பும் நெருங்கியவர்கள் முகத்தில் தோன்றும் சிரிப்பில் உள்ளது என்று நம்பும் இவர், தன் தோழிகளுடன் அன்பர் தினத்தைக் கொண்டாடுவதை இதற்கு முன்பு வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருவர் தன் அன்பை வெளிப்படுத்தும் வழி காலப்போக்கில் மாறினாலும் தான் கொண்டுள்ள அன்பு மாறுவதில்லை என்பது அன்புகொண்ட மனங்களின் நம்பிக்கையாக உள்ளது.

