இளம் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் அண்மையில் சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் 'தி ஃபெசிலிடேட்டர்ஸ் நெக்ஸஸ்' (டிஎஃப்என்) என்ற பயிற்சிப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இளையர்களின் தலைமைத்துவ பண்புகளையும் திறன்களையும் வளர்த்து அவர்கள் குழுவாகச் செயல்பட உதவும் நோக்கில் இப்பயிலரங்கு அமைந்தது. கடந்த மாதம் 26ஆம் தேதியன்று நடைபெற்ற இப்பயிலரங்கில் 20க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கேற்று பயனடைந்தனர். சுவாரசியம் குறையா வண்ணம் இளையர்களே பயிலரங்கை வழிநடத்தினர்.
பங்கேற்பாளர்கள் தங்களுடைய பலம், பலவீனத்தை ஆராய்ந்தனர். குழுவாகச் செயல்படுவதன் பயன்களும் சவால்களும் விளக்கப்பட்ட நடவடிக்கைகளும் பயிலரங்கில் இடம்பெற்றன. இளையர்கள் குழுவாகவும் சுயமாகவும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பரிசுகளும் வென்றனர்.
இப்பயிலரங்கை வழிநடத்திய இளையர்களில் ஒருவரான 26 வயது ரஸ்வீன் கவுர், "நான் கற்றுக்கொடுத்ததைவிட கற்றுக்கொண்டதுதான் அதிகம் என்பேன்.
"நண்பர்களுடன் நடந்த கேள்வி பதில் அங்கத்தில் என்னைச் சிந்திக்க வைத்து, என்னுள் ஆர்வத்தையும் தேடலையும் தூண்டும் வகையில் கேள்விகள் அமைந்தன. தொடர்ந்து இதுபோன்ற பயிலரங்குகளில் கலந்துகொள்ள விரும்புகிறேன்," என்று கூறினார்.
"நண்பர்களுடன் பயிலரங்கில் கலந்துகொண்டது புது அனுபவமாக இருந்தது. நம்முடைய பலத்தை மேம்படுத்திக்கொள்ளும் அதே சமயம் பலவீனத்தையும் கருத்தில் கொண்டு ஆராய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவராக உருவெடுக்கும் ஊக்கம் இப்பயிற்சியின் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது," என்றார் தொடக்கக் கல்லூரி மாணவியான 18 வயது ரச்சனா பாண்டியன்.
இவரைப்போலவே இப்பயிற்சிப் பயிலரங்கில் கலந்துகொண்ட 23 வயது சிவாய சுப்பிரமணியம், "வகுப்பறையில் பாடம் கற்பது போல் இல்லாமல் இந்தப் பயிலரங்கு புதுமையாக அமைந்தது. இளையர்கள் இதை வழிநடத்தியதால் மனதில் தோன்றிய சந்தேகங்களை நண்பர்களிடம் கேட்பதுபோல் தயக்கமின்றி வெளிப்படையாகக் கேட்டு தெளிவுபெற முடிந்தது," என்று கூறினார்.

