தேசிய நூலக வாரியத்தின் அனுபவக் கற்றல் முயற்சியின் ஒரு பகுதியாக அண்மையில் ‘மர்ம தேசம்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்மொழியில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டி, இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழு ‘தமிழா’, இந்த நிகழ்ச்சி உருவாக அதன் ஒத்துழைப்பை நல்கியது.
ஆசிரியர்களிடையே இந்தப் போட்டி நிகழ்ச்சி அதிகக் கவனத்தைப் பெற்று வருகிறது. போட்டியில் மொத்தம் 15 பள்ளிகள் பங்கேற்றன.
தேசிய நூலகத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆராய்ந்து, புதிர்களைக் கட்டவிழ்த்து நூல் அடிப்படையிலான மர்மத்தைக் கண்டுபிடிக்கும் செயல்பாடுகளில் குழுக்கள் ஈடுபட்டனர்.
அனைத்து குறிப்புகளும் தமிழில் வழங்கப்பட்டிருந்தன.
எழுத்தாளர் மகேஷ்வரனின் ‘ராஜநாகம்’ என்ற மின்நூலிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமும் செயல்பாட்டுக் கையேடும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆறு அறைகளுக்குச் சென்று இதனை முடிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் வழிகாட்டிகளும் ஒவ்வோர் அறையிலும் ஒரு ‘கேம் மாஸ்டரும்’ இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்கள் அவர்களுடைய குழுவினருடன் உற்சாகமாகப் பங்கேற்றனர். வெற்றிபெற்ற குழுக்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தேசிய நூலக வாரியத்தின் ‘Read For Books’ தொண்டு இயக்கத்திலும் பங்கேற்றனர்.
இதில் ‘ராசி - ஒரு கதை’ எனும் நூலை 15 நிமிடங்கள் வாசித்தனர்.
நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்போட்டி நிகழ்ச்சி போன்று எதிர்காலத்தில் மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பங்கேற்பாளர்கள் கூறினர்.

