வி.அருள் ஓஸ்வின்
இளையர்கள் மனதில்பட்டதை வெளிப்படையாகக் கலந்துரையாடத் தகுந்த சூழலை ஏற்படுத்துவது; மேற்கொள்ளவேண்டிய சமூகத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்; இளையர்களின் கருத்தை அரசியல், சமூகத் தலைவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது போன்ற முக்கிய நோக்கங் களுடன் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் தமிழ் இளையர் மாநாடு நடந்து முடிந்துள்ளது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 37ஆவது செயற்குழுவின் ஏற்பாட்டில் சென்ற மாதம் 23, 24 ஆம் தேதிகளில் 'கிராஸ்ரூட்ஸ் கிளப்'பில் நடைபெற்ற இம் மாநாட்டில் 16 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 150 இளையர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்க விழாவில் சிண்டாவின் துணைத் தலைவர் விஸ்வா சதாசிவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.
தமிழ் மொழி, சமூகத்தின் மேம்பாட்டுக்கு சமூக, மாணவ அமைப்புகள் கூட்டுறவுடன் ஒன்று பட்டுச் செயல்பட வேண்டும் என்று தமிழ்ப் பேரவையின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தலைமைத்துவம், கல்வி, கலை மற்றும் கலாசாரம், சமூக சேவை என நான்கு பிரிவுகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தமிழ் இளையர்களின் சிந்தனைகளை வெளிக்கொணர்ந்தன. வல்லுநர்களிடம் பல சுவாரசியமான கேள்விகளும் எழுப்பப்பட்டன.
மாநாட்டில் சமூக அக்கறையுடன் கூடிய தங்களது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்த இளையர்கள். படங்கள்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

