உபகாரச் சம்பளத்தோடு வரலாறு கற்க விழையும் சதிஷ்

உபகாரச் சம்பளத்தோடு வரலாறு கற்க விழையும் சதிஷ்

2 mins read
2f0707dd-ad33-40bb-acd1-246bde4ea3ae
-

ராணுவத் துறை மீதும் நாட்டின் வரலாற்றின் மீதும் அதீத ஆர்வத்தைச் சிறு வயதிலிருந்தே வளர்த்துக்கொண்டார் சதிஷ் குமார் சுகுமார், 19 (படம்). ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியில் சென்ற ஆண்டு அனைத்துலக பெக்கலரேட் பட்டயப் படிப்பைச் சிறந்த தேர்ச்சியுடன் முடித்த இவர், சிங்கப்பூர் ஆயுதப் படையின் உபகாரச் சம்பளத்தை வென்று லண்டன் கிங்ஸ் கல்லூரியில் போர் ஆய்வு, வரலாறு பட்டப்படிப்பை மேற்கொள்ள உள்ளார். "வரலாற்றை முடிந்துபோன ஒன்றாகக் கருதாமல், அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டால் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியவை பல இருக்கும்," என்றார் சதிஷ். வரலாற்றின் மீதுள்ள ஆர் வத்தை இவர் மேன்மேலும் வளர்த்துக்கொள்ள உயர்நிலைப் பள்ளியில் அளிக்கப்பட்ட பல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டார்.

தன் பள்ளியில், ஐக்கிய நாட்டு மன்றக் கூட்டத்தின் மாதிரி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது சதிஷ் அதில் பிரிட்டனின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு பிரிட்டனின் பல்வேறு பிரச்சினைகளையும் உலக நாடுகளின் பிரச்சினைகளையும் கலந்துரையாடி மாதிரித் தீர்வுகளை உருவாக்கினார். இதுபோன்ற போட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் பல முறை கலந்துகொண்டு, அவர் அமெரிக்கா, நைஜீரியா போன்ற பல்வேறு நாடுகளில் சிங்கப்பூர் பிரதிநிதியாகப் பங்குபெற்றதாகச் சொன்னார்.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல, பள்ளிப் பாடங்களில் கற்கும் பலவற்றை நாம் வாழ்வினில் பயன்படுத்தும்போதுதான் அது, நமக்குப் பன்மடங்கு பயனுள்ளதாக அமையும்," என்று கூறிய சதிஷ், "வரலாறு போன்ற பாடங்களுக்கு அதிக அளவில் பயிற்சிப்பாடங்கள் இருக்காது. எனவே, நமக்குக் கிடைக்கக்கூடிய சில வாய்ப்பு களையும் முடிந்தவரை பயன்படுத்திக் கொள்வது அவசியம்," என்றார்.