ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்
பள்ளிப் பருவம் முதல் மேடை நாடகங்கள் மீதும் கலைகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்த 20 வயது சபரீஷ் இளங்கதிர், உலக விவகாரங்களிலும் அதீத நாட்டம் கொண்டிருந்தார்.
நாடுகளின் கொள்கை மாற்றங்கள் மற்ற நாடுகளைப் பாதிக்க நேரிடும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அரசியல், பொருளியல், அனைத்துலக உறவுகள் மீது அக்கறை கொண்டவராக இருந்ததால் வெளியுறவு அமைச்சின் உபகாரச் சம்பளம் கிடைத்ததும் மகிழ்ந்தார் சபரீஷ்.
“ஐரோப்பா, ஆசியாவிற்கு இடையே உள்ள உறவுகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது,” என்று சபரீஷ் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், “அடிப்படை பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்காமல் சம்பந்தப்பட்ட நாடுகள் ஒன்றின் மீது மற்றொன்று பழி சுமத்துகின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கை பறிபோகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இழந்த நம்பிக்கையை எவ்வாறு மீண்டும் காப்பாற்றப்போகிறது என்பதைப் பற்றி ஆராய விரும்புகிறேன்,” என்றார் அவர்.
இம்மாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி, வெளியுறவு அமைச்சு எட்டு மாணவர்களுக்கு வெளியுறவு அமைச்சு உபகாரச் சம்பளங்களை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
வெளியுறவு அமைச்சின் இரு வகையான உபகாரச் சம்பளங்கள் வழங்கப்பட்டன. அரசாங்கச் சேவை ஆணையத்தால் வழங்கப்பட்ட உபகாரச் சம்பளங்கள், வெளியுறவு அமைச்சால் வழங்கப்பட்ட உபகாரச் சம்பளங்கள் ஆகியன அவை.
அரசாங்க சேவை ஆணையம் வழங்கும் வெளியுறவு சேவைக்கான உபகாரச் சம்பளத்தைப் பெற்றார் சபரீஷ்.
பிரான்சில் உள்ள ‘சயன்சஸ் போ’ பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் அரசாங்கத் துறையில் அண்மையில் பட்டப் படிப்பில் சேர்ந்தார் அவர். குறிப்பாக, ஆசியா கண்டம் குறித்து பிரத்தியேகப் பாடமாகப் படிக்கவிருக்கிறார்.
வெளியுறவு அமைச்சு அதி காரியாக பிற்காலத்தில் பணியாற்றவிருக்கும் சபரீஷ், பள்ளிப்பருவத்தில் மேடை நாடகங்கள் படைப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார். ‘ராஃபிள்ஸ் பிளேயர்ஸ்’ என்ற மேடை நாடகம் படைக்கும் இணைப்பாட நடவடிக்கைக் குழுவில் சேர்ந்திருந்தார் சபரீஷ்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என பன்முகத் திறனாளராக விளங்கினார் அவர்.
மேடை நாடகங்கள் படைப்பதில் உள்ள நாட்டத்தால் ‘தி ரன்னவே கம்பனி’ எனும் லாபநோக்கமற்ற இசை, நாடக அமைப்பு ஒன்றை கடந்த ஆண்டு சில நண்பர்களுடன் சேர்ந்து சபரீஷ் தொடங்கினார்.
“தாங்கள் நிபுணர்களாக இல்லாவிட்டாலும், கலையில் ஆர்வமுள்ள இளையர்கள் அனைவருக்கும் கலைகளுக்கென்று ஓரிடம் இருக்கவேண்டும். அவர்களுக்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டும்,” என்றார் சபரீஷ்.
இளையர்களால், இளையர்களுக்காக நிறுவப்பட்ட இந்த அமைப்பு, என்றும் இளையர்களைச் சார்ந்த சூழல்களைப் பற்றிய படைப்புகளில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறார் சபரீஷ். அதன் செயற்குழு பொறுப்புகளை இளையர்கள் ஏற்க வேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூர் ஒரு சிறந்த நாடாக தொடர்ந்து திகழ்வதோடு, அதன் கொள்கைகள் எந்தச் சூழலுக்கும் பொருந்துமாறு மாற்றங்களை ஏற்படுத்த சபரீஷ் விரும்புகிறார்.
“மக்–க–ளின் நம்–பிக்–கை–கள், அக்–க–றை–களை உணர்ந்து, அதற்கு ஏற்ப திட்–டங்–களை உரு–வாக்க உதவ வேண்–டும்,” என்–றார் அவர்.