சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் கால் பதிப்பதற்கு முன்பு பெரியாச்சி (Peri Aachi) எனும் இந்தியப் பெண் இங்கு வசித்ததாக பதிவுகள் கூறுகின்றன.
1819ஆம் ஆண்டில் முதன்முறையாக சிங்கப்பூருக்கு சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் வந்தது முதலான சம்பவங்களை புத்தகமாக தொகுத்துள்ளார் திரு முன்ஷி அப்துல்லா.
முன்ஷி அப்துல்லாவின் பாட்டி என நம்பப்படுகின்ற திருவாட்டி பெரியாச்சி குறைந்தது 200 மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியராக இருந்தார் என்று தெரிவித்தார் திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம்.
இம்மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் தேசிய நூலகத்தில் நடைபெற்ற ‘ஊடறு’ அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிறப்புரையாற்றினார்.
அரசியல், பொருளாதாரம், பெண்கள் சமூகம் என பல்வேறு பரிமாணங்களில் தமிழ்ப் பெண்களின் விடுதலை தொடர்பான கருத்துகள் இந்த அனைத்துலக மாநாட்டில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
பல்வேறு நிலைகளிலும் தமிழ்ப் பெண்களின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளையும் பெண்கள் எதிர்நோக்கும் சவால் களையும் விவாதிப்பதற்காக 2005ல் சுவிட்சர்லாந்தில் ‘ஊடறு’ அமைப்புத் தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற இந்த அனைத்துலக தமிழ்ப் பெண்கள் மாநாடு இவ்வாண்டு சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
‘அவேர்’ என்ற பெண்கள் உரிமைக்கான அமைப்பின் தலைவரான திருவாட்டி சிங்கம், கடந்த 30 ஆண்டுகளில் பெண்களுக்கான அமைப்புகளுக்குத் தலைமை தாங்கி உள்ளார்.
அத்துடன் ஒத்த நோக்கம் கொண்ட குழுக்களின் இணை நிறுவனராகவும் மாநாடுகளின் பேச்சாளராகவும் வலம் வந்துள்ளார்.
சிங்கப்பூரில் இந்தியப் பெண்கள் இன்று பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், பெண் சமத்துவம் சார்ந்த பிரச்சினைகளை நாம் தவிர்த்துவிடக்கூடாது என்றும் இதுபோன்ற மாநாடு அப்பிரச்சினைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
பெண்நிலை அரசியல், பெண் நிலையும் பெண்ணியமும், துறைசார்ந்த வளர்ச்சியும் பெண்களும் என பல்வேறு தலைப்புகளில் உள்ளூர், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 பேச்சாளர்கள் இம்மாநாட்டில் பேசினர்.
பெண் சமத்துவம் குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் பாமா, ஒரு பெண் தனது வாழ்க்கைக்குத் தேவையானதை தானே தீர்மானிக்கக்கூடியவளாக இருப்பதுதான் பெண்ணியம் எனக் கூறினார்.
ஒரு பெண் என்பவள் தன்னை எவ்வாறு ஆற்றல்மிக்கவளாக மாற்றிக்கொள்கிறார் என்பதை விளக்கும் ‘கருக்கு’ என்ற நாவலையும் ஒரு பெண் திருமணம் எனும் நிறுவனத்தில் நுழையாமல் வெற்றிகரமாக தனித்து வாழ்ந்து காட்டுவதை சித்திரிக்கும் ‘மனுஷி’ என்ற நாவலையும் பல சிறுகதை களையும் எழுதியுள்ளார் 62 வயது பாமா.
இவ்வாண்டின் மாநாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த திருமதி ரமா சுரேஷும் குமாரி அஷ்வினி செல்வராஜும் கூறினர்.
“பெண்கள் தொடர்பான விஷயங்களில் ஆண்கள் ஆர்வம் காட்டி ஊக்குவித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி,” என்றார் ரமா சுரேஷ்.
ஓர் ஆணாக பெண்களுக்கு எவ்விதத்தில் தாம் உதவலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் இம்மாநாடு உதவியதாக திரு வசந்தன் திருநாவுக்கரசு கூறினார்.