தேசிய இளையர் படப்பிடிப்பு விருதுகளுக்கு (National Youth Film Awards) உங்களது படைப்பைச் சமர்ப்பித்துப் பரிசுகளை வெல்லும் அரிய வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.
2015ஆம் ஆண்டிலிருந்து இத்தேசிய அளவிலான விருதுகள், படப்பிடிப்புத் துறையின் வெவ்வேறு பிரிவுகளில் தலைசிறந்த இளையர்களை கெளரவித்து வருகிறது. ‘ஸ்கேப்’ (SCAPE) ஏற்பாட்டில் நடக்கும் இப்போட்டி, இளையர்கள் தங்களது படப்பிடிப்புத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வாய்ப்பளிக்கிறது.
இப்போட்டிவழி படப்பிடிப்புத் துறையின் நிபுணர்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளலாம். வெற்றியாளர்களுக்கு உள்ளூர், வெளிநாட்டு திரைப்பட, குறும்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் படப்பிடிப்புத் துறையில் வேலை அமையவும் வாய்ப்புள்ளது.
இவ்வாண்டின் வெற்றியாளர்கள் வட்டார அளவிலான குறும்பட விழாக்களில் கலந்துகொள்வதுடன் கிட்டத்தட்ட $70,000 மதிப்பிலான பரிசுகளை வெல்லவும் முடியும்.
சொந்த குறும்படத்தினை இயக்குவதற்கான நிதி ஆதரவும் கிடைக்கப்பெறும் அதிர்ஷ்டசாலி நீங்களாக இருக்கலாம். இப்போட்டிக்கான இவ்வாண்டின் கருப்பொருள், ‘உடைக்கமுடியாத நமது இளையர்களின் உணர்வு’.
15 வயதுமுதல் 35 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
இது குறித்த மேல் விவரம் அறிய https://www.scape.sg/media/nyfa/ எனும் இணையப்பக்கத்தை நாடவும். உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கான இறுதி நாள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி.