கொவிட்-19 கிருமி பரவிவரும் இந்தக் காலகட்டத்தில் நம்பகமான சுகாதார தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க விரும்புபவர்களில் டாக்டர் தினேஷ் விஷ்வா குணசேகரனும் (படம்) ஒருவர். இவரது முயற்சிக்குக் கைகொடுக்கிறது 'ஆஸ்க் டாக்டர்' இணையத்தளம்.
பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த இணையத்தளம், கொவிட்-19 கிருமி பரவல் பற்றிய கேள்விகளுடன் சுகாதாரம் தொடர்பாக மற்ற கேள்விகளைக் கேட்பதற்கான சிறந்த தளமாக உள்ளது. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர் தினேஷ் உள்ளிட்ட சான்றளிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்குள் பதிலளிப்பர்.
கிருமி பரவத் தொடங்கிய காலத்திலிருந்து தம்மை நாடுபவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்தில் பணிபுரியும் டாக்டர் தினேஷ் தெரிவித்தார். இந்த இணையத்தளத்தை நிறுவிய திரு பிரயன் டோ என்பவர், இச்சேவையை வழங்க கடந்த ஆண்டு தம்மை அணுகியதாக டாக்டர் தினேஷ் கூறினார்.
அடுத்த மாதம்தான் இந்த இணையத்தளம் அதிகாரபூர்வமாக தொடங்கப்படவிருந்தது. இருந்தபோதும், கொரோனா கிருமித்தொற்றின் காரணமாக கடந்த ஜனவரி மாதத்திலேயே இந்தத் தளம் தொடங்கப்பட்டது.
"இந்தத் தளத்திற்குக் கூடுதலான அம்சங்களை முன்னதாகத் திட்டமிட்டிருந்தோம். நீங்கள் காணும் இந்த இணையத்தளம் எங்கள் திட்டத்தின் ஓர் அங்கம்தான். ஆயினும், கிருமித்தொற்று தொடர்பான பொய்த் தகவலும் பதற்றமும் அதிகரித்துள்ளதைக் கண்டு நாங்கள் எங்களது உத்திகளை மாற்றினோம்," என்றார் பகுதி நேர மருத்துவராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றும் டாக்டர் தினேஷ், 28.
கிருமி பரவத் தொடங்கியது முதல் பலரும் அது பற்றி தொடர்ந்து கேள்விகளைக் கேட்டு வருவதைச் சுட்டிய டாக்டர் தினேஷ், மக்களிடையே தவறான கருத்துகள் பரவலாக இருப்பதை அவரது கேள்விகள் தமக்கு உணர்த்தியதாகக் கூறினார்.
"காண்டா மிருகத்தின் கொம்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குணப்படுத்தும் என மக்கள் பலர் நம்பி அவற்றை வாங்குகின்றனர். பதற்றத்தால் அவர்கள் பேரங்காடிகளில் டிஷ்யூ தாட்களை வாங்க்கி குவிக்கின்றனர். இதைக் கண்டு கவலையடைந்த நான், அவர்களுக்குச் சரியான ஆலேசானையை வழங்க வேண்டும் என விரும்பினேன்," எனத் தெரிவித்தார்.
நூலகங்களில் இரவல் பெறும் புத்தகங்கள் மூலம் கிருமி பரவுமா, பொதுப் போக்குவரத்து அல்லது பொது இடங்களில் இருக்கைகளில் அமருவதன் மூலம் கிருமி ஒருவரைத் தொற்றிக்கொள்ளுமா போன்ற தேவையற்ற அச்சங்களை இந்த இணையத்தளத்தின்வழி தாம் போக்கியதாக டாக்டர் தினேஷ் குறிப்பிட்டார்.
இந்தத் தளத்தில் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பிற மருத்துவ நிபுணர்கள் வழிமொழியவும் விமர்சிக்கவும் முடியும் என அவர் கூறினார். பயன்தரும் ஆலோசனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் தொழில்நுட்பத்தை இந்த இணையத்தளம் கொண்டுள்ளது என்றும் டாக்டர் தினேஷ் சொன்னார்.
இந்த முயற்சிக்குச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறிய இவர், அண்மைக் காலத்தில் பலரும் இச்சேவையைப் பயன்படுத்தியுள்ளதைச் சுட்டினார்.
"எங்கள் தளத்தில் இணைந்திருக்கும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது," என்றும் இவர் குறிப்பிட்டார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாகவும் நேரடியாகப் பலரைத் தொடர்புகொண்டு மருத்துவக் குழுவினர் இந்த இணையத்தளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இளையர்களையும் நடுத்தர வயதினரையும் இத்தளம் அதிகம் ஈர்க்கும் எனக் கூறிய டாக்டர் தினேஷ், 60 வயதிற்கும் மேற்பட்ட பலரும் தயக்கமின்றி கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டதைச் சுட்டினார்.
இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்த சொந்தப் பதிவு ஒன்றை உருவாக்கத் தேவை இல்லை என்பதால் மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை இத்தளத்தில் பதிவிடும் அவசியம் இருக்காது என டாக்டர் தினேஷ் தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் சுகாதாரம் தொடர்பான மேல் விவரங்களைத் கேட்க விரும்புவோருக்கு காணொளி தொலைத்தொடர்பு வசதிகள் கூடிய விரைவில் அமைக்கப்படும் என்றார் டாக்டர் தினேஷ். தற்போது சிங்கப்பூரில் உள்ளவர்களுக்காக செயல்படும் இத்தளம் இனி பிற நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் ஆங்கிலம் தவிற பிற மொழிகளில் இது இயங்கலாம் என்றும் இவர் கூறினார்.
கிருமித்தொற்று பற்றிய சந்தேகங்களுடன் மருந்துப் பொருட்கள் குறித்து ஏதேனும் ஐயம் இருந்தால் தாராளமாக இந்த இணையத்தளம் வழியாக தெளிவுபெற பொதுமக்களை அழைப்பதாக டாக்டர் தினேஷ் தெரிவித்தார்.
"இத்தளம் வழியாக மக்கள் சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு பயனடைய வேண்டும் என்பதே என் விருப்பம்," என்றார் இவர்.
மேல் விவரங்களுக்கு https://www.askdr.co/ எனும் இணையத் தளத்திற்குச் செல்லலாம்.

