பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தபோதும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான முயற்சிகளில் பங்கேற்க தொண்டூழிய நடவடிக்கையில் முகம்மது ஜௌஹர், 23, ஈடுபட்டார்.
ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஐஎம்எம் கடைத்தொகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி பொதுமக்களுக்கு கிருமி நாசினிகளை விநியோகம் செய்தவர்களில் பல்கலைக்கழக மாணவரான இவரும் ஒருவர்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் (எஸ்ஐடி) போக்குவரத்துப் பொறியியல் துறையில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவரான இவர், தொண்டூழிய சேவையிலும் ஈடுபட்டுள்ளார்.
“கொவிட்-19 நிலவரம் குறித்து அரசாங்கம் கூறும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பதற்றம் கொள்ளாமல் வீட்டில் இருந்தவாறு அன்றாட வாழ்க்கையைத் தொடர வேண்டும்,” என்று ஜௌஹர் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கை மூலம் மக்களுக்கு பொருளுதவி மட்டுமின்றி மனோரீதியான உதவியும் கிடைப்பதாக இவர் கூறினார்.
“தங்களது நலன் மீது அக்கறை காட்ட மற்றவர்களும் இருக்கிறார்களே என்பதை உணரும் மக்களுக்குத் தைரியம் கூடுகிறது,”
இதேபோன்ற சமூக உணர்வுடன் தாமும் தம் நண்பர்களும் இதில் தொண்டூழியர்களாக சேர்ந்ததாகக் கூறினார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு இளையரான நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) வர்த்தகப் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் ருஃபினா ஆன் ஆன்ட்ரூ, 22.
கொவிட்-19 கிருமி பரவிவரும் காலத்தில் பலர் என்ன செய்வது எனத் தெரியாமல் திணறியதைக் கண்ட ருஃபினா, கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் இறங்க வேண்டும் என முடிவெடுத்தார்.
“அனைவரின் பாதுகாப்பையும் கருதி பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் சரியான நடவடிக்கை.
“எனினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் பாதுகாப்புடன் வெளியே செல்லவேண்டும்.
“இந்தச் சூழலில் தொண்டூழியர்களின் பங்கு முக்கியம். இளையர்களான நாங்கள் சமுதாயத்திற்கு உதவி செய்யாவிட்டால் வேறு யார் அதனைச் செய்வார்?” என்று ருஃபினா கூறினார்.
கிருமி நாசினிகளைப் பெற வந்த குடியிருப்பாளர்களில் பலர் தம்மிடம் கனிவுடன் நடந்துகொண்டு பாராட்டை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
கொவிட்-19 கிருமி பரவும் சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறும். அதை எதிர்கொள்ள, அதற்கேற்ற வகையில் பிறருக்கு உதவ வேண்டும் என்றார் அவர்.
கிருமி நாசினிகளைப் பெற்றுக்கொண்ட பொதுமக்களில் ஒருவரான கவிதா நாகேந்திரன், 40, தொண்டூழியர்களின் சேவையைப் பாராட்டினார்.
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு தம் கணவருடன் புலம்பெயர்ந்த திருமதி கவிதா, சிங்கப்பூர் மக்கள் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது என்று சொன்னார்.
“இங்கு நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். அரசாங்கம் சொல்வதை மக்கள் மதித்து நடப்பதே இதற்குக் காரணம்,” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கிருமி நாசினி வழங்கப்படும் எனக் கடந்த மாதம் நடுப்பகுதியில் தெமாசெக் அறநிறுவனம் அறிவித்திருந்தது.
தீவு முழுவதும் 109 சமூக மன்றங்களிலும் 16 கடைத்தொகுதிகளிலும் கிருமி நாசினிகள் விநியோகிக்கப்பட்டன.