கி. ஜனார்த்தனன்
மருத்துவராகவும் பொறியாளராகவும் தகுதிபெறுவதற்காக ‘எஸ்யுடிடி-டியூக் என்யுஎஸ்’ பயிற்சித்திட்டத்தில் படித்துவருகிறார் இளையர் வைஷ்ணவி திவ்யா ஸ்ரீதர். இவரின் கற்றல் பயணத்தில் மெய்நிகர் தொழில்நுட்பம் மாறுபட்ட அனுபவத்தை அளித்துள்ளது. சிறு வயதிலிருந்து கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் அதீத ஆர்வம் காட்டி வந்த 20 வயது திவ்யா, இத்தகைய தொழில்நுட்பத்தின்மூலம் கொவிட்-19 கிருமித்தொற்று போன்ற சவால்களைச் சமாளிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக கூறினார். சிறுவயதிலிருந்தே மெய்நிகர் தொழில்நுட்ப அம்சங்களில் ஆர்வம் கொண்டவர் திவ்யா.
தம்மைச் சுற்றி சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி அடிக்கடி சிந்திப்பதாக கூறிய திவ்யா, கணக்கு, அறிவியல் முறைகளில் இருக்கும் நேரடிப்போக்கையும் நம்பகத்தன்மையையும் எப்போதும் விரும்பியதால் அப்பாடங்களில் சிறப்பாகச் செய்து வந்ததாக தெரிவித்தார். இந்த ஆர்வத்தால் திவ்யா, பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்கியதற்கு முன்னரே, ‘ஏ-ஸ்டார்’ நிறுவனத்தின் வேலைப் பயிற்சித்திட்டம் ஒன்றில் சேர்ந்தார். சருமத்தின்கீழ் உற்றுப்பார்க்கப் பயன்படுத்தப்படும் அலைக்கற்றைத் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு ஒன்றுக்குத் தரவு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் கடந்தாண்டு மே மாதம் எஸ்யுடிடி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இப்பல்கலைக்கழகத்தில் மெய்நிகர்த் தொழில்நுட்பம் வழியாகக் கற்பிக்கப்பட்ட கணித பாடத்தைப் பயின்ற முதல் 125 மாணவர்களில் திவ்யாவும் ஒருவர்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலமாக தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் தாக்கம் உடனே காண்பிக்கப்படுகிறது என்றும் இந்த அனுபவம் பாடப் புத்தகங்களில் கிடைத்திருக்காது என்றும் திவ்யா தெரிவித்தார். இதனால் உலகப் பிரச்சினைகளுக்கு ஏற்ற விதமாக இந்தப் பாடம் இருப்பதாக திவ்யா கூறினார்.
அவ்வாறு அமைந்த ஒரு கணித முறை, கொவிட்-19 கிருமிப் பரவலின் போக்கு எப்படி மாறும் என்பதற்கான சாத்தியங்களைத் தரவுகளின் உதவியுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் எடுத்துக்காட்டுவதாகக் கூறினார். கொவிட்-19 சூழலில் இதுபோன்ற கணித மாதிரிகள் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் எனக் கூறினார்.
“இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாக வெவ்வேறு முடிவுகளின் விளைவுகளை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தேவையின்றி உணர்ச்சிவயப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பும் இதனால் குறைகிறது,” என்றார். சார்ஸ் போன்ற முன்னைய நோய்ப்பரவலுடனும் ஒப்பிட்டுக் காட்டவும் இத்தொழில்நுட்பம் உதவுவதாக அவர் சுட்டினார்.
மெய்நிகர் தொழில்நுட்பம் வழியாகக் கற்கும் பாடத்தின் கடினத்தன்மை குறைவதை உணர்வதாக மாணவர்கள் கூறுகின்றனர் என இதைக் கற்பித்து வரும் ஆசிரியர் டாக்டர் கீகன் காங், தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்ட படங்களை மட்டும் பார்க்காமல் மெய்நிகர் சூழலில் இவற்றைக் காணும்போது பாடங்கள் மாணவர்களுக்கு எளிதில் புரிகின்றன. அத்துடன் கொவிட்-19 கிருமிப் பரவல் நிலவும் இந்நேரத்தில் மாணவர்களுக்குத் தடையின்றி கற்பிக்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம்,” என்று அவர் கூறினார். கடந்தாண்டு இந்தப் பாடத்திற்குரிய வகுப்புகள் முடிந்திருந்தாலும், மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் ஆராய்ந்ததாக திவ்யா தெரிவித்தார்.
“வெவ்வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெற்ற மாணவர்கள், ஒன்றுசேர்ந்து வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆய்வு செய்தனர். அதில் கொரோனா கிருமிப் பரவலை ஆய்வு செய்வதற்குக் கிட்டத்தட்ட ஐந்து திட்டங்கள் உருவாக்கப்பட்டன,” என்றார்.
தற்போது திவ்யா, சில மாணவர்களுடன் என்யுஎஸ் மருத்துவப் பள்ளியுடன் மற்றொரு பயிற்சித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நோயாளிகளின் தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் தளம் ஒன்றை உருவாக்கி அத்துடன் முக அடையாள மென்பொருளை இவர்கள் இணைத்துள்ளனர்.
“குறிப்பிட்ட ஒரு நோயாளி ஓர் ஆண்டு கழித்துத் திரும்ப வந்தாலும் முக அடையாளத்தைக் கொண்டு அவரைப் பற்றிய தகவல்களை உடனே காட்டிவிடும் கருவியாக இது விளங்குகிறது,” என்றார். இதுபோன்ற பயிற்சித்திட்டங்களில் சிறப்பாகச் செய்வதற்கு சுயமாக கற்கும் முனைப்பு தேவைப்படுவதாக திவ்யா தெரிவித்தார். தனக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நிபுணத்துவத்தை அடையும் பொறுப்பு மாணவருடையதுதான் என்று இந்த மாணவி கூறுகிறார்.
“மதிப்பெண்களில் மட்டும் குறியாக இருந்து குறைந்தபட்சமான உழைப்பைச் செலுத்தினோமானால் அது நமது திறமைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் மாணவரின் அறிவு வளர்ச்சி இறுதியில் பள்ளி கற்றுக்கொடுப்பதைவிட மிஞ்சும்” என்றார் திவ்யா. இத்தகைய திட்டங்களில் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு எனக் கூறும் இவர், இதற்காக மனமுடைந்து முடங்கிக் கிடக்காமல் அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி சிந்தித்திடவேண்டும் என்றார்.