கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் இம்மாதம் 7ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததிலிருந்து அத்தியாவசியச் சேவைகள் தவிர்த்த மற்ற அனைத்துத் தொழில்களும் சேவைகளும் முடங்கிப் போயுள்ளன. தேசிய நூலகமும் பொது நூலகங்களும் அவற்றின் வரலாற்றில் முதல்முறையாகத் தங்களது கதவுகளை மூடியிருக்கின்றன. நூலகத்தின் வழக்கமான சேவைகள் முடங்கியிருந்தாலும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு வாசகர்களுக்கு உதவ அது பல்வேறு திட்டங்களை விரைவாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நூலகத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவும் சில புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்திலிருந்து நாளும் ஒரு நூல் என்ற தலைப்பில் அது தமிழ் மின்நூல்களை அறிமுகம் செய்து வருகிறது. நூலகத்துக்கு நேரடியாக வர முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தவாறே தங்களது திறன்பேசிகளில் தமிழ் மின்நூல்களை இரவல் வாங்கலாம்.
"2000க்கும் மேற்பட்ட தமிழ் மின்நூல்களை எங்களது திரட்டில் சேர்த்திருக்கிறோம். அவற்றை வாசகர்கள் எங்கிருந்தவாறும் இரவல் பெற்று வாசித்து மகிழலாம். குறிப்பாக நாம் வீட்டில் தங்கியிருக்க வேண்டிய இதுபோன்ற காலகட்டங்களுக்கு சரியான தீர்வு மின்நூல்கள்," என்று தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் திரு அழகிய பாண்டியன் கூறினார்.
மின்நூல்களில் உள்ள இன்னொரு அனுகூலம், 21 நாள் இரவலுக்குப் பிறகு தானாகவே அந்த நூல் திரும்பிச் செலுத்தப்பட்டு விடும். எனவே மறதி என்பதற்கும் அபராதம் செலுத்துவதற்கும் தேவையிராது என்றும் அவர் கூறினார். தேசிய நூலக வாரியத்தின் திரட்டில் தமிழ் மின்நூல்களையும் சேர்த்து சுமார் 725,000 மின் நூல்கள் உள்ளன. மேலும் 'LyndaLibrary' என்ற வசதியின் மூலம் பயிற்சிக் காணொளிகளை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வீட்டில் தங்கியிருக்கும் நேரத்தில் அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான துறையில் பயிற்சிக் காணொளிகளைப் பார்த்து பலன் பெறலாம்.

