விருந்தோம்பல் துறையில் தளவாட நிர்வாகியாக பணியாற்றி வந்த திருமதி ராஜலட்சுமி ஜெயபாலன் (படம்), தமது இரண்டு மகள்களைப் பார்த்துக்கொள்வதற்காக வேலையைக் கைவிட்டார். இருந்தபோதும் தமக்கு தெரிந்த 'ரெய்க்கி' பயிற்சியைப் பிறருக்கு காணொளி உரையாடல் மூலம் இவர் வழங்குகிறார்.
"வாழ்க்கையில் தங்களுக்கு பிடிக்காத அல்லது ஒத்துவராத பாதையில் செல்லும் பலருக்கு பதற்றம் ஏற்படுகிறது. காலப்போக்கில் அவர்கள் இந்த உணர்வுகளைத் தங்கள் உள்ளத்திற்குள் புதைத்துவிடுகின்றனர்.
"இப்பிரச்சினையைக் களையும் விதமாக இந்தப் பாரம்பரிய மனோதத்துவக் கலையை நான் சொல்லித் தருகிறேன்," என்று திருமதி ராஜலட்சுமி கூறினார்.
கொவிட்-19 குறித்த அச்சங்களை எதிர்கொள்வதற்காக எட்டு முதல் 60 வயது வரையிலான தனிநபர்களுக்கு இணையம்வழி இவர் கற்றுத் தருகிறார். "ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் கற்றுத் தருவேன். தங்கள் வீட்டிலிருந்தவாறு கற்பதால் பங்கேற்பாளர்களுக்குச் சௌகரியமாக உள்ளது. இதில் நீக்குப்போக்கும் உள்ளது," என்று இவர் சொன்னார்.
கிருமி பரவும் சூழலில் வீட்டிலிருந்து கற்பது பலருக்குப் புதிதாக இருப்பதால் பல சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் என திருமதி ராஜலட்சுமி, 38, கூறினார்.
இருந்தபோதும், "விண்மீன்கள்கூட தூரத்திலிருந்து மிளிர்கின்றன. அதேபோல மனதை வளப்படுத்தும் தகவல்களை வீட்டிலிருந்து கற்றாலும் அதன் மூலம் நன்மை அடைய முடியும்," என்றார் அவர்.
கணினி தொழில்நுட்பராகப் பணிபுரியும் வினோதினி கலைக்கண்ணன் (படம்), வெளியிடங்களுக்குச் சென்று தனியாக பொழுதைக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்த காலத்தில் வீட்டில் முடங்கியிருப்பதால் என்ன சிரமம் ஏற்படப் போகிறது என்று நினைத்த வினோதினி, போகப் போகத்தான் அதன் தாக்கத்தை உணர ஆரம்பித்தார்.
வேலைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையே உள்ள எல்லைக்கோடே தெரியவில்லை என்கிறார் இவர். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தைச் சமாளிக்க தடுமாறிய தமக்கு இனம் புரியாத பதற்றமும் மனஅழுத்தமும் ஏற்பட்டதாகக் கூறிய இவர், இதனைக் கையாள 'சைக்கோதெரப்பி' எனப்படும் மனநல சிகிச்சைப் பாடத்தை இணையம்வழி கற்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
"எனது மனச்சுமையைப் பற்றி நான் என் நண்பர் ஒருவரிடம் கூறியபோது இந்த இணைய வகுப்பில் சேர என்னை அவர் ஊக்குவித்தார்," என்று குமாரி வினோதினி, 30, கூறினார்.
இந்த வகுப்பில் சிங்கப்பூரிலுள்ள மாணவர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் இருவழி தொடர்பு அம்சங்கள் மூலம் இணைவதால் தமது கண்ணோட்டம் விரிவடைவதாகக் கூறுகிறார் வினோதினி. இதன் பிறகும் இணையம்வழி கூடுதலாக அம்சங்களைக் கற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளதாகக் கூறிய இவர், போட்டித்தன்மையையும் நிச்சயமற்ற சூழலையும் எதிர்கொள்வதற்கு இதுவே முதல் படி என்றார்.
திருமதி ராஜலட்சுமி ஜெயபாலன். வலது படம்: கணினி தொழில்நுட்பராகப் பணிபுரியும் வினோதினி கலைக்கண்ணன்

