சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதற்கு தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியில் ஆரம்பகால பாலர்பருவத் துறையில் பட்டயப் படிப்பை முடித்த டெனிஸ் ஹேமா ராயன் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
பலதுறை தொழிற்கல்லூரிக்கு முன்பாக தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (காலேஜ் சென்ட்ரல் கிளை) கணக்கியல் துறையில் டெனிஸ் சேர்ந்தார்.
ஆனால், இத்துறையில் சேர்ந்த இரண்டாவது வாரத்திலேயே இந்தப் பாடம் தமக்குச் சரிப்பட்டு வராது என உணர்ந்த இவர், ஆரம்பகால பாலர்பருவ துறைக்கு மாற முடிவு செய்தார்.
தொடக்கப்பள்ளி பருவத்திலிருந்தே ஆசிரியர் பணியில் தமக்கு ஆர்வம் இருந்தபோதும் உளவியல் துறையில் சேரலாம் என அப்போது தாம் நினைத்திருந்ததாக இவர் தெரிவித்தார்.
"ஆனால் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை. எனினும் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் (ஐடிஇ) பயில்வதற்குத் தகுதிபெற்றேன். மனதில் குறிக்கோள் எதுவுமின்றி கணக்கியல் பாடத்தில் சேர்ந்தேன்," என்று டெனிஸ் நினைவுகூர்ந்தார்.
அந்நேரத்தில்கூட இதுதான் தமக்குச் சரியான துறையா என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது.
"எனது திறமைக்கேற்ற படிப்பு இது எனக் கூறி எனது குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர். இருந்தபோதும் சரியா தவறா என்ற சிறு குழப்பத்துடன் தொடர்ந்து படித்தேன். 'கார்ப்பேடியம் ஸ்கூல்
ஹவுஸ்' பாலர் பள்ளியில் ஆறு மாதகால பயிற்சித்திட்டம் ஒன்றை முடித்த பின்னர்தான் எந்தத் துறையில் எனக்கு விருப்பம் உள்ளது என்பது குறித்த தெளிவு பிறந்தது," என்று கூறினார் டெனிஸ், 23.
ஐடிஇ கல்வியை முடித்த பின்னர் பலதுறை தொழிற்கல்லூரியில் சேர்ந்த டெனிஸ், ஒரே துறையில் படித்ததால் பாடங்களின் சுமையை அவ்வளவாக உணரவில்லை எனத் தெரிவித்தார்.
'ஜிபிஏ' மதிப்பீட்டு முறையின்கீழ் 4க்கு 3.33 புள்ளிகளைப் பெற்ற டெனிஸ், கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தின்போது பாலர் பள்ளி ஆசிரியராக வீட்டிலிருந்த
படியே மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார். பிள்ளைகளுடன் நேரில் இருந்து கற்பிப்பதையே தாம் பெரிதும் விரும்புவதாகக் கூறிய இவர், தற்போது கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா ரவீந்திரன், டெனிசைப் போலவே உரிய நேரத்தில் சரியான முடிவை எடுத்ததால் இவர் கல்வியில் முன்னேறு வதற்கான வாய்ப்பு கிட்டியது.
இவர் உயர்நிலை 4ல் பயின்றுகொண்டிருந்தபோது மாணவர்களை முன்கூட்டியே பலதுறை தொழிற்கல்லூரியில் சேர்க்கும் திட்டத்திற்கு ஐஸ்வர்யா விண்ணப்பித்திருந்தார். நேர்முகத் தேர்வு சுற்றுகள் பலவற்றைக் கடந்து இறுதியில் அந்தத் திட்டத்திற்கு இவர் தகுதிபெற்றார்.
பள்ளியில் இணைப்பாட நடவடிக்கைகளின் மீது அதிக ஆர்வம் காட்டினாலும் அதே அளவுக்கு ஈடுபாட்டை இவரால் கல்வியில் காட்ட முடியவில்லை. குறிப்பாக, மானுடவியல் பாடத்தில் சிறப்பாக செய்ய முடியாமல் போனது இவருக்கு வருத்தம்.
அறிவியல் பாடம் மீது அதிக நாட்டம் கொண்ட தமக்கு பலதுறை தொழிற்கல்லூரியின் கல்வி முறை தமக்குப் பொருத்தமாக அமைந்ததாக ஐஸ்வர்யா தெரிவித்தார்.
"நான் தொடர்ந்து இணைப்பாட நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மற்ற மாணவர்களுடன் பழகுவேன். இருந்தபோதும் என் கல்வி பாதிக்கப்படவில்லை. அதில் நான் சிறப்பாகத்தான் செய்தேன்," என்று இவர் கூறினார்.
நேனோ தொழில்நுட்பம் மற்றும் பொருள் அறிவியல் (Nanotechnology and Material Sciences) துறையில் பட்டயக் கல்வியை முடித்துள்ள ஐஸ்வர்யா, இறுதியில் 4க்கு 3.55 ஜிபிஏ புள்ளிகளைப் பெற்றார். தமது வெற்றிக்குப் பலதுறை தொழிற்கல்லூரியின் விரிவுரையாளர்கள் உறுதுணையாக இருந்ததாக இவர் தெரிவித்தார்.
'பிஎன்ஜி' நிறுவனத்தில் வேலைப்பயிற்சித் திட்டத்தில் சிறப்பாகவும் செய்து அங்கு விருது பெற்ற ஐஸ்வர்யா, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறைக்கான பொறியியல் படிப் பில் சேர இருக்கிறார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியதால் தாம் இன்று நல்ல நிலையில் இருப்பதை எண்ணி மகிழ்வதாக இவர் கூறினார்.

