- ஸ்ரீ.ஸாந்தினி -
கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தால் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடக்கும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளில் சிலவற்றை மெய்நிகர் பாணியில் நடத்த, சில அமைப்புகளும் குழுக்களும் முன்வந்தன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் கடந்தாண்டு சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் இளையர்களுக்காக நடத்திய ‘திரைக்கவி’ குறும்பட போட்டியை இம்முறை இணையத்தில் அரங்கேற்றியது.
இளையர்களின் தமிழ் ஆர்வத்தைத் தூண்டி உள்ளூர் தமிழ் இலக்கியத்தை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது இப்போட்டியின் நோக்கம். வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடத்த இப்போட்டி, உள்ளூர் எழுத்தாளர் திரு க.து.மு இக்பாலின் ‘இருளில் வெளிச்சம்’ கவிதை நூல் தொகுப்பை மையமாகக் கொண்டது.
போட்டியாளர்கள் அக்கவிதைத் தொகுப்பிலிருந்து தங்களுக்கு விருப்பமான ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்து, அதனை மையமாகக் கொண்டு ஒன்றரை மாதங்களுக்குள் குறும்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். குறும்பட உருவாக்கத்திற்கு முன், போட்டி விவரங்கள் அவர்களுக்கு விளக்கப்பட்டதோடு பிரபல உள்ளூர் இயக்குநர் முகம்மது யாசிர், அவர்களுடன் குறும்படம் தயாரிப்பதற்கான உத்திகளைப் பகிர்ந்துகொண்டார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று குழுக்கள் ‘மடல்’, ‘தொடு வானம்’, ‘பாதரட்சை’ ஆகிய தலைப்புகளைக் கொண்ட குறும்படங்களைப் போட்டிக்காக சமர்ப்பித்தன.
கடந்த மே 16ஆம் தேதி, போட்டியில் பங்கெடுத்த குறும்பட இயக்குநர்கள் ‘திரையில் தமிழ்’ எனும் தலைப்பிலான இணையக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதில் போட்டியாளர்கள் தங்களது குறும்படக் கதைகளை நான்கு உள்ளூர் ஒளிவழித் துறை நிபுணர்களிடம் விளக்கினர். உள்ளூர் திரைப்படத் துறையில் தமிழ்மொழியின் நிலையைப் பற்றி அந்த நிபுணர்களும் கருத்துகள் பகிர்ந்துகொண்டனர். இறுதியில், எழுத்தாளர் திரு க.து.மு இக்பாலின் ‘இரட்டையர்’ என்ற கவிதையை மையமாகக் கொண்ட 4 நிமிட குறும்படமான ‘பாதரட்சை’ குழுவினருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
“இரட்டையர் கவிதை காலணியைப் பற்றி இருந்ததால் சற்று வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்து அதனை தேர்ந்தெடுத்தோம். திரு இக்பாலின் கவிதையைக் குறும்பட வடிவில் காட்ட முடிந்ததில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று தெரிவித்தார் வெற்றியாளர் குழுவான ‘நச்சுன்னு பிலிம்ஸ்’ உறுப்பினர் திரு செம்பியன் சோமசுந்தரம், 27.
கூடுதல் செய்தி: ப.பாலசுப்பிரமணியம்