ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும் அவர் திருந்தி வாழ வழி வகுக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர் 19 வயது குமாரி சுந்தரம் மோகன் ஷக்தி.
இவருக்குப் பொதுச் சேவை ஆணையத்தின் (பிஎஸ்சி) கௌரவமிக்க சிங்கப்பூர் போலிஸ் படை உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் பிஎஸ்சி எனப்படும் பொது சேவை ஆணையத்தின் உபகாரச்சம்பளத்தைப் பெற்ற 23 பேரில் ஷக்தியும் ஒருவர்.
சிங்கப்பூர் போலிஸ் படையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குத் தகுதி அடிப்
படையில் இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று போலிஸ் படையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை ஷக்தியின் மனதில் விதைத்தது.
தமது வீட்டில் ஒரு பிரச்சினை நிலவியபோது போலிசார் விரைந்து வந்து வீட்டிலுள்ள தமது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததாக அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
அதுமட்டுமல்லாது, புலனாய்வு அதிகாரி ஒருவர் தமது தனிப்பட்ட தொடர்பு எண்ணை கொடுத்து, உதவி தேவைப்பட்டால் தம்மை தொடர்புகொள்ளுமாறு கூறியது தமது மனதை நெகிழச் செய்த
தாக ஷக்தி கூறினார்.
இதுபோன்ற பணியில்தான் ஈடுபட வேண்டும் என்று அன்று அவர் முடிவெடுத்தார். இவர் விரைவில் யேல்-என்யுஎஸ் கல்லூரியில் உளவியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள இருக்கிறார்.
"ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் பயிலும்போது எனது நண்பர்களில் சிலர் மன அழுத்தத்தாலும் மனச் சோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
"அவர்களது மனநிலையைப் புரிந்துகொண்டு உதவவேண்டும் என்ற அக்கறையோடு இதன்
தொடர்பில் இணையத்தில் ஆராய்ந்தேன். மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த ஆதரவு வழங்க நான் மேற்கொள்ள
இருக்கும் பட்டப்படிப்பு உதவும்," என்றார் ஷக்தி.
மேலும் தமது பணியில் சந்திக்கவிருக்கும் பலதரப்பட்ட நபர்களின் மனநிலையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இது வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார்.
"பொதுவாக சிங்கப்பூர் போலிஸ் படை உபகாரச் சம்பளத்தைப் பெறும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சீருடைப் பிரிவில் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பாக்கியமாகக் கருதுகிறேன்," என்று கூறினார் ஷக்தி.
தமது வாழ்க்கையில் பக்கபலமாக இருக்கும் அவரது தாயார், எந்த பிரச்சினை வந்தாலும் படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பது முக்கியம் என்பதை எப்போதுமே தமக்கு வலியுறுத்தியதாக ஷக்தி தெரிவித்தார். இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கவும் அவர் தான் ஷக்தியை ஊக்குவித்தார்.
எதிர்காலப் பணிக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் ஷக்தி அடிக்கடி பயிற்சி செய்து வருகிறார்.
தமது பட்டப்படிப்பைத் துவங்க ஆர்வத்தோடு காத்திருக்கும் ஷக்தி அண்மையில் தனது அடிப்படை ராணுவப் பயிற்சியை மேற்கொண்டார். அங்கு அவரை தவிர மற்ற அனைவரும் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அங்கு வயதிலும் அவர்தான் ஆக இளையவர்.
"முதலில் எனக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருந்தாலும் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகளைச் செய்தபோது உற்சாகமாக இருந்தது. அது ஒரு புதுவித அனுபவம். குறிப்பாக, துப்பாக்கிச் சுடும் பயிற்சி மிக சுவாரசியமாக இருந்தது," என்று கூறினார் ஷக்தி.
"எனது வாழ்க்கையின் பல கட்டங்களில் பலர் எனக்கு உதவிஉள்ளனர். பல சவால்களையும் சிரமங்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள எனக்கு தைரியத்தையும் தந்துள்ளனர். தோள் கொடுத்தவர்களை நினைவில் கொண்டு ஒரு சிறந்த போலிஸ் அதிகாரியாக சமூகத்திற்குப் பங்
களிக்க விரும்புகிறேன்," என்று பெருமிதத்துடன் கூறினார் ஷக்தி.
குற்றவியல் உளவியல் அல்லது தடயவியல் உளவியல் தொடர்பாக மேற்கொண்டு படிப்பதும் இவரது லட்சியம்.

