இந்து இளங்கோவன்
இனம், மொழி, சமயம் பாராமல் அனைவரையும் ஒன்றிணைக்கும் தன்மையை இசை கொண்டுள்ளது.
அவ்வகையில் தேசிய தினத்தை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம், மலாய் மரபுடைமை நிலையம், சன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டபம் ஆகிய சிங்கப்பூரின் மூன்று மரபுடைமை நிலையங்களும் 'வீ ஆர் சிங்கப்பூர்' என்ற பிரபல தேசிய தினப் பாடலைப் பாரம்பரிய இசையில் படைக்கும் காணொளிகளை வெளியிட்டுள்ளன.
உள்ளூர் இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இசைக் காணொளிகளுக்கு சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்திய மரபுடைமை நிலையத்தின் ஏற்பாட்டில் கர்நாடக, இந்துஸ்தானி இசை மெட்டில் படைக்கப்பட்ட இக்காணொளியில் மூன்று இந்திய கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
'வீ ஆர் சிங்கப்பூர்' என்ற பாடலை அனைவரும் ரசிக்கும் வண்ணம் வார்த்தைகள் இல்லாமல் ஒரு இசைக் கோர்வையாகப் படைத்து நாட்டின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர்.
காணொளியில் ராகவேந்திரன் ராஜசேகரன் புல்லாங்குழல் வாசித்து மனதை இதப்படுத்த, திரு கமல் பென்ஸரா தபலா வழி உற்சாகம் எழுப்ப, குமாரி ஷரண்யாவின் வயலின் இசை அனைத்தையும் சங்கமிக்கும் விதமாக அமைந்துள்ளது.
காணொளியில் மூவரும் இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்து இந்திய மரபுடைமை நிலையத்தில் வாசித்தது தேசிய தினத்தை முன்னிட்டு நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டது.
சிறு வயதிலிருந்தே புல்லாங்குழல் வாசித்துவரும் 32 வயது ராகவேந்திரன் தற்போது இசை
பயிற்றுவிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் செயல்படுகிறார்.
"நாட்டின் பல கொண்டாட்டங்களில் பல பரிச்சயமான பாடல்களை வாசித்திருக்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினத்தின்போது பல இசைக் கலைஞர்
களுக்கு தேசிய தினப் பாடல்களை வாசிக்க வாய்ப்பு கிடைக்கும். பல முறை செய்த ஒன்று என்றாலும் தேசிய தினப் பாடலை வாசிப்பது என்பது ஒரு தனி இன்பம். இசையின் மூலம் நாட்டு மக்களை ஒருங்கிணைப்பது ஒரு பெருமையான அம்சம். இசையின் வழி நாட்டுப் பற்றை வெளிப்படுத்த முடிவதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்," என்று தெரிவித்தார் ராகவேந்திரன்.

