பாடலுடன் விழிப்புணர்வூட்டும் ஹிரண்யா

பாடலுடன் விழிப்புணர்வூட்டும் ஹிரண்யா

2 mins read
78bc9f40-11d8-4339-8c79-7e1995495fb7
தமிழ்நாடு காவல் துறை ஆதரவில் உருவான கொவிட்-19 விழிப்புணர்வுபாடல் காட்சியில் ஹிரண்யா பல அறிவுரைகளை உள்ளடக்கியவரிகளைப் பாடியிருந்தார். படம்: காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது -

கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தினால் வெளிநாட்டில் பட்டப்படிப்பு மேற்கொண்ட மாணவர்கள் பலரும் அவரவர் நாட்டிலிருந்தே இணையம் வழி கற்றலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை.

அவர்களுள் ஒருவர் ஹிரண்யா. ஆனால் அவர் சமூகத்திற்குப் பங்காற்றத் தவறவில்லை.

கிரேனேடாவில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜஸ் பல்கலைக்கழகத்தில் இராண்டாம் ஆண்டு மருத்துவ மாணவியான எஸ்.ஹிரண்யா ஆண்டு தொடக்கத்திலிருந்தே சிங்கப்பூரில் இருந்தவாறு இணையம் வழி வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அமெரிக்க நேரப்படி வகுப்புகள் நடப்பதால், அவரது அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள்.

கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கம் தம்மைப் போல பிறரையும் பாதித்துள்ளது என்பதை உணர்ந்தார் ஹிரண்யா.

'புரோஜெக்ட் டோர்ம்' (Project Dorm) என்ற திட்டத்தைப் பற்றி அவருக்கு அப்போது தெரியவந்தது.

சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு, கற்றல் ஃபேஸ்புக் பக்கமான இதன் மூலம், தாமும் ஏதாவது சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்று எண்ணி உடனே செயலில் இறங்கினார்.

அத்தளத்தில் இடம்பெறும் மெய்நிகர் பாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பிரபல சினிமா பாடல்களைப் பாடி, நிகழ்ச்சியைத் தங்கும் விடுதியிலிருந்து கைபேசி வழி பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்தார்.

"பாடுவது என்றால் எனக்கு கொள்ளை ஆசை. அதிலும் சமூகத்திற்குப் பயனுள்ள விதத்தில் எனது ஆற்றலை வெளிப்படுத்துவது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது நாட்டை விட்டு இங்கு வந்து அரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். அவர்கள் சோர்ந்திருக்கும் வேளையில் அவர்களைப் பாடல்கள் வழி உற்சாகப்படுத்த இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

"சினிமா பாடல்களைப் பாடியதால் அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது," என்று பூரிப்புடன் தெரிவித்த ஹிரண்யா, தனது யூடியூப் நேரலையில் தான் பாடியுள்ள காணொளிகளைப் பதிவேற்றமும் செய்து வருகிறார்.

ஹிரண்யா சிறு வயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இவ்வாண்டு மே மாதம் தமிழ்நாடு காவல் துறை ஆதரவில் உருவான கொரோனா கிருமி விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடுவதற்கான வாய்ப்பு இவருக்கு கிட்டியது.

இந்தப் பாடலுக்கான காணொளியையும் அவரே தயார் செய்து பதிவேற்றம் செய்தார்.

இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த காணொளியைப் பார்த்து நல்ல கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர்.

"பல நாடுகள் மருத்துவ ரீதியாக எதிர்கொள்ளும் பெரிய சவாலான கொரோனா கிருமியைப் பற்றி பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது, ஒரு மருத்துவ மாணவி என்ற முறையில் எனக்குப் பெருமையாக உள்ளது," என்றார் ஹிரண்யா.

ஒரு சிறந்த மருத்துவர், ஒரு நல்ல பாடகர் ஆகிய இரு பெரும் லட்சியங்களுடன் தன்னால் முடிந்த பங்கை சமூகத்திற்கு ஆற்றி வருகிறார் இளையர் ஹிரண்யா.