சில நாட்களாகவே இங்குள்ள தமிழ் இளையர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல் 'ஹே பேபி'. இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்தவர், வளர்ந்து வரும் கலைஞர் பிசிபி சக்தி. தான் எழுதி, தயாரித்து, பாடியும் உள்ள இப்பாடலை 'ஸ்பாட்டிஃபை' இசைத் தளத்தில் 24 வயது சக்தி அண்மையில் வெளியிட்டிருந்தார். இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பயின்று வருகிறார்.
நடிகர் அர்ஜுன் புகழாரம்
'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் சர்ஜா இப்பாடலைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் முதன்முதலில் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வெளியிட்டபோது சக்தியின் திறமையைப் பாராட்டியிருந்தார். பாடலைப் பற்றி நல்ல விமர்சனம் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து பாடலின் காணொளி, இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அனுபவம் இல்லை என்றாலும்...
இசையை முறையாகப் பயிலவில்லை என்றாலும் தனது முதல் பாடல் எப்படி அமைய வேண்டும் என்பதையும் அதன் மெட்டு, இசை, தொனி ஆகியவற்றை மிக நுணுக்கமாக திட்டமிட்டதையும் பற்றி கூறினார் சக்தி. இசையமைப்பாளர் கார்த்திக் கண்ணன் உதவியுடன் பின்னர் பாடலை உருவாக்கினார்.
"சிறு வயதிலிருந்தே தமிழ் பாடல்கள் கேட்பதிலும் பாடுவதிலும் நிறைய ஆர்வம் இருந்தது. 10 வருடங்களுக்கு முன்பு மேடையில் பாடும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு எனது தொடக்க கல்லூரி நாட்களில் ஒரு நிகழ்ச்சியில் பாடினேன். அதில் பாடிய பாடகர்கள் பலர் சங்கீதம் பயின்றவர்களாகவும் இயல்பாகவே அழகாக பாடும் திறன் வாய்ந்தவர்களாகவும் இருந்தனர்.
"அதனால் அப்போது எனது தன்னம்பிக்கையை அது பாதித்தது. ஆனால் அதற்கு பிறகு என்னை மேம்படுத்திக்கொள்ள நானே சுயமாக நிறைய முயற்சிகள் எடுத்தேன். நான் பாடும் விதத்தை கண்டு பலர் என்னைக் கேலி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலடியாக ஒரு நாள் சொந்த பாடல் ஒன்றை வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்," என்று தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார் சக்தி. கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்பு நாட்களின்போது வீட்டில் பொழுதுபோக, பாடல் எழுதத் தொடங்கினார் சக்தி.
திருப்தி பெறும்வரை திருத்தம்
"இசையை முறையாக பயிலாத எனக்கு பாடலை உருவாக்கும் பணி சவாலாக இருந்தது," என்றார் அவர். 'ஹே பேபி' பாடலுக்காக தானாகவே இசையைப் பற்றிய அடிப்படை கூறுகளைக் கற்றுக்கொண்டு, தனது பாடல் எவ்வாறு அமையவேண்டும் என்று இசையமைப்பாளரிடம் விளக்கினாராம் சக்தி.
இசைக் காணொளியில் வரும் 'செக்ஸஃபோன்' இசை பலருக்கும் பிடித்த ஓர் அம்சம். தனது பாடல் ஒருவித 'நவநாகரீகமான' உணர்வைத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த 'செக்ஸஃபோன்' இசையைச் சேர்த்ததாக கூறினார் சக்தி. இதற்காக இந்தியாவின்
'செக்ஸஃபோன்' கலைஞர் ஒருவரையும் அணுகினர். சக்தி இப்பாடலை தனது சொந்த செலவில் தயாரித்திருக்கிறார்.
தோள் கொடுத்த நண்பர்கள்
பாடல் காணொளியைத் தயாரித்தவர் சக்தியின் நெருங்கிய நண்பரும் உள்ளூர் கலைஞருமான ரிஷி வர்மன். இவரும் இப்பாடலின் ஒரு பகுதியில் 'ராப்' செய்துள்ளார்.
காணொளியைத் தயாரிக்க நண்பர்கள் கைகொடுத்ததாகவும் கூறினார் சக்தி. பட்டக் கல்வியின் நான்காவது ஆண்டில் உள்ள சக்தி, படிப்பில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் டிசம்பர் மாதத்தில் இன்னொரு பாடலுக்கான தயாரிப்புப் பணிகளைத் தொடங்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

