பிறருடன் இணையும் வசதியை நமக்கு தந்துள்ள இணையத்தை அச்சுறுத்தலுக்காக பயன்படுத்துகின்றனர் சிலர். தாங்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகள் மற்றும் செயல்களால் ஏற்படக்கூடிய தாக்கத்தை இவர்கள் உணர்வதில்லை.
பெயர், முகம், அடையாளம் தெரியாத ஒருவர் இணையம் வழி நம்மை அச்சுறுத்தும்பொழுது என்ன செய்ய வேண்டும், சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வு பல இளம் வயதினரிடையே இருப்பதில்லை. அத்துடன் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதை உணராமல் உதவி பெற முன்வராதவர்களும் இருக்கின்றனர்.
இவர்களுக்குக் கைகொடுக்கும் விதமாக தமிழர் பேரவை இளையர் பிரிவினர் மற்றும் ‘மெண்டல் ஆக்ட்’ (mentalact) அமைப்பினர் இணைந்து ‘சைபர்அவேர்’ (CyberAware) என்ற கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளனர். காலை முதல் இரவு வரை இணையத்தில் மூழ்கியிருக்கும் இளைஞர்களும் இணையப் பயன்பாட்டில் ஆழ்ந்திருக்கும் சிறுவர்களின் பெற்றோரும் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது.
இணைய அச்சுறுத்தலுடன் போராடும் இந்திய இளைஞர்களுக்கும் சிறுவர்களின் பெற்றோருக்கும் உதவ, வழிகாட்டுதல் குறிப்புகளுடன் பயனுள்ள வளங்களைப் பகிர்ந்துகொள்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது இந்தக் கலந்துரையாடல்.
“கொவிட்-19 தொற்றால் நம்மில் பலர் முன்பைக்காட்டிலும் தற்போது சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். அதே சமயத்தில் சமூக ஊடகத் தளங்களில் இணைய அச்சுறுத்தல் உட்பட பல வடிவங்களில் தீமைகளும் ஏற்படுகின்றன.
இதுபோன்ற இணைய அச்சுறுத்தல்களின் விளைவுகள் மோசமாக இருக்கக்கூடும். பாதிக்கப்பட்டவர்களின் நற்பெயரை சேதப்
படுத்துவதோடு மனரீதியாகவும் அதிகளவில் பாதிக்கின்றது,” என்று தெரிவித்தார் ஏற்பாட்டுக் குழு தலைவர்களில் ஒருவரான டாக்டர் மா.பிரெமிக்கா.
இணைய அச்சுறுத்தல்களின் உளவியல் பின்னணி, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள், பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளவும் மீண்டுவரவும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி இந்த இணையக் கருத்தரங்கில் மனநல நிபுணர்களும் ஆர்வலர்களும் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர்.
மேலும் இணைய அச்சுறுத்தல் சார்ந்த குற்றங்களைக் கையாள்வது குறித்த சட்டரீதியான கண்ணோட்டத்தை ஒரு வழக்கறிஞர் வழங்கவிருக்கிறார். கருத்தரங்கின் முன்னோட்டமாக மூன்று காணொளித் தொடர்களை தமிழர் பேரவை இளையர் பிரிவும் மெண்டல் ஆக்ட்டும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டிருந்தன. இணைய அச்சுறுத்தலால் பாதிப்படைந்தவர்கள் அவர்களது அனுபவங்களை இவற்றில் பகிர்ந்துகொண்டனர்.
இணைய அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த காணொளி தொடரும் கருத்தரங்குக்கு துணைபுரியும் என்று ஏற்பாட்டு குழு எதிர்பார்க்கிறது. மேலும் இந்திய சமூகத்தில், மனநல பிரச்சினைகளைப் பற்றிய உரையாடல்களை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் கருத்தரங்கு கொண்டுள்ளது.