சமூக மேம்பாட்டில் இளையர்களின் ஈடுபாடு குறைவாக உள்ளது என்று பலவாறான கருத்துகள் கூறப்படும் வேளையில், அதை முறியடிக்கும் வகையில் IMYouth, IM Collective, Im.Prof ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்திய முஸ்லிம் இளையர் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
மாநாட்டில் பங்குபெற்ற 50 இளையர்கள், இந்திய முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் தேவைகள் போன்றவற்றை அடையாளம் கண்டு அதுகுறித்த கலந்துரையாடல் மேற்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைத்தனர்.
ஜனவரி 16ஆம் தேதி இணையம்வழி நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்திய முஸ்லிம் சமூகத்தில் பாலின சமத்துவம், தலைமைத்துவத்தில் இளையர்களின் ஈடுபாடு, சமூகத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, மனநலம் குறித்த விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் வெளிப்படையாக கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்திய முஸ்லிம் சமூக மேம்பாட்டில் இளையர்களை ஈடுபடுத்தி அவர்களது கருத்துகளையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்கி தருவதை நோக்கமாகக் கொண்டது இந்த மாநாடு.
எந்தவொரு சவாலையும் சந்திக்க நேரிடும்போது, ஒட்டுமொத்த சமூகமாக ஒன்றுசேர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம். இந்திய முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பது மாநாட்டில் பல இளையர்கள் முன்வைத்த முக்கிய கருத்துகளில் ஒன்று.
மாநாடு நடைபெறுவதற்கு முன்பே இந்திய முஸ்லிம் இளையர்களின் தேவைகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் பகுப்பாய்வு ஒன்றை நடத்தினர். இதில் இளையர்கள் குறிப்பிட்டவை பின்னர் மாநாட்டில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்த மாநாட்டில் பகிர்ந்துகொள்ளப்பட்ட முக்கிய கருத்துகளை இந்திய முஸ்லிம் சமூகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே அடுத்தகட்ட நடவடிக்கை என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
மேலும், இந்திய முஸ்லிம் இளையர் குழுக்கள் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்ள சில திட்டங்களைத் தான் வைத்திருப்பதாகவும் ஏற்பாட்டுக் குழு கூறியது.
செய்தி: இந்து இளங்கோவன்