ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக் கும் சக்தி ஓர் ஆசிரியருக்கு உண்டு என்பதை திண்ணமாக நம்புகிறார் யுனோயா தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த சஹானா தேவி. ‘ஜிசிஇ’ மேல்நிலை தேர்வை முடித்த மாணவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம், என்ன படிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் சஹானா ஆசிரியராகும் தமது கனவை நெருங்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ‘ஏ’ நிலை தேர்வு முடிந்ததும் அவர் ‘ஹோப் சென்டர்’ என்னும் இடத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் மற்றும் கணக்கு துணைப்பாட வகுப்புகளை நடத்தி வருகிறார்.
சஹானாவின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். சிறு வயதிலிருந்தே ஆசிரியர் தொழிலிலும் மாணவர்களின் வளர்ச்சியிலும் தமது பெற்றோர் காட்டிய ஈடுபாடும் அக்கறையும் சஹானாவின் கவனத்தை ஈர்த்துள்ளன. சிறுவயதில் தந்தை தமக்கு கணிதப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது அந்தப் பாடத்தின் மீதான அவரது பற்றை சஹானாவால் உணர முடிந்தது. தந்தையைப் போல எதிர்காலத்தில் பல மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு நல்ல வழிகாட்டி யாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் இவர்.
“ஒரு முறை ‘ஹோப் சென்டரில்’ ஒரு தமிழ் மாணவிக்கு நான் தமிழ்ப் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது அந்த மாணவி வாக்கியங்களைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டுக்கொண்டிருந்ததை அறிந்தேன். தொடக்கத்தில் கடினமாக இருப்பதால் அந்தப் பாடத்தையே மொத்தமாக அவர் வெறுத்துவிடக்கூடாது என்று நினைத்து, தமிழை அவருக்குப் புரியும் வகையில் சுவாரசியமாகக் கற்பித்தேன். அவர் மெல்ல சில வாக்கியங்களைப் புரிந்துகொள்ள தொடங்கினார். அதைக் கண்டு நான் பெற்ற மனநிறைவுக்கு அளவே இல்லை,” என்றார் சஹானா.
பள்ளியிலும் சஹானாவிற்கு பக்கபலமாக இருந்து அவருக்கு வழிகாட்டியிருக்கின்றனர் அவரது ஆசிரியர்கள்.
சஹானாவுக்கு தமிழ் மீது நிறைய ஆர்வம் இருக்கிறது. இது அவரை உயர்தரம் மூன்று தமிழ்ப் பாடம் எடுக்க தூண்டியது.
தமிழ் கலாசாரத்தின் மீதும் மொழியின் மீதும் உள்ள அவரது ஆர்வம் வளர்வதில் அவரது தமிழ் ஆசிரியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர் என்று கூறிய சஹானா ‘சொற்சிலம்பம்’, லிஷா தமிழ் பேச்சாளர் மன்றம் ஆகிய நிகழ்ச்சிகளில் தமது பேச்சாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பொருளியல் பாட ஆசிரியராக விரும்பினாலும் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் தம்முடைய பங்கை ஆற்ற உறுதி பூண்டுள்ளார் இளை யர் சஹானா.