மாதங்கி இளங்கோவன்
தொடக்கப்பள்ளியில் ஓர் இணைப்பாட நடவடிக்கையாகத் தொடங்கிய சரணியாவின் நடனப் பயணம், இப்போது அவர் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது.
‘வழி’ என்ற நடன படைப்பை, கடந்த மாதம் 6ஆம் தேதியன்று ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில், பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் ‘பிரசாந்தம்’ நடன விழாவின் ஓர் அங்கமாக மேடையேற்றினார் 29 வயது சரணியா ராமதாஸ்.
சிறுவயது முதல் நடனம் எவ்வாறு தன் வாழ்க்கையில் ஓர் அங்கமானது என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நடனப் படைப்பின் கதைக்களம் அமைந்திருந்தது.
தான் 20 ஆண்டுகளாக பரதம் கற்றுக்கொண்டதற்கு இந்தப் படைப்பு ஒரு சிறு சமர்ப்பணம் என்கிறார் சரணியா.
சரணியாவின் பரதநாட்டிய குருவான நீவின் ஹெர்ஷெல், இந்தப் படைப்பின் நடன இயக்குநராவார்.
சரணியாவின் தொடக்கப்பள்ளி நடன ஆசிரியராக இருந்த வசந்தா காசிநாத், சரணியாவுக்கு நாட்டியத்தில் திறமையுண்டு என்பதை உணர்ந்ததால் பரதநாட்டிய வகுப்புகளுக்குச் செல்லுமாறு ஊக்குவித்தார்.
தொடக்க காலத்தில் பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தில் பரதநாட்டிய வகுப்புகளுக்குச் சென்ற சரணியாவுக்கு, அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்றார்.
ஆனால், பரதநாட்டியம் ஓர் அற்புதமான கலையென்பதை நாளடைவில் அவர் உணரத் தொடங்கினார்.
நீவின், நீரஜா, சாந்தா பாஸ்கர் போன்ற பல நடன ஆசிரியர்களிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்ட சரணியா, ஒவ்வோர் ஆசிரியரிடமும் தான் புதியனவற்றைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். அத்துடன் அவர்கள் அமைத்த அடித்தளத்தைக்கொண்டுதான் இன்று தன்னால் சொந்தமாக ஒரு நாட்டிய பாணியை உருவாக்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உதாரணத்திற்கு, வலிமையாகவும் அங்கசுத்தத்தோடும் எவ்வாறு ஆடுவது என்பதை நீவினிடம் கற்றுக்கொண்டார். சாந்தா பாஸ்கரிடம் நளினமாகவும் பாவனைகளோடும் பெண்மையை வெளிப்
படுத்தும் வண்ணம் எவ்வாறு ஆடுவது என்பதைக் கற்றார்.
தேசிய கலை மன்ற தொழில்துறை, வர்த்தக உருமாற்றப் பிரிவின் துணை நிர்வாகியாக பணிபுரியும் சரணியா, வாரத்தில் ஐந்து முறையாவது நடன வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்கிச் செல்கிறார்.
“வேலைக்கும் நடனத்திற்கும் தமக்கு நெருக்கமானவர்களுக்கும் நேரம் ஒதுக்குவது சற்று சிரமமாக இருந்தாலும், நாட்டியம் என் மனதுக்கு அமைதி தரும் ஒன்றாக அமைந்துவிட்டது. எது நடந்தாலும் நாட்டியத்தை நான் நிச்சயம் கைவிடமாட்டேன்,” என்கிறார் சரணியா.
சிறுமியாக இருந்தபோது மேடையில் நடனமாடப் பயந்த சரணியா, தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இன்று அந்த மேடை மாறிவிட்டதாகக் கருதுகிறார். திறமையான நடனமணியாகத் திகழும் இவர், ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ‘பாச்சாத்தா’ நடனத்தை முறையாகக் கற்று வருகிறார். பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தில் நடன வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.