காயத்திரி காந்தி
கடந்த மாதம் நடந்தேறிய ‘தாய்மொழிக் கருத்தரங்கு 2022’ நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், இருமொழிக் கொள்கையைப் பற்றியும் தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றியும் பேசியிருந்தார்.
அதையடுத்து தமிழ்மொழிப் புழக்கத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை கடந்த ஞாயிறு தமிழ் முரசின் தலையங்கம் எடுத்துரைத்தது. தமிழ் நமது அதிகாரத்துவ மொழியாக இருப்பதையும் தாண்டி, அது எவ்வாறு நம் அடையாளத்தின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும், எப்படி தமிழை செழித்தோங்கச் செய்வது போன்ற கருத்துகள் தலையங்கத்தில் வலுவாக முன்வைக்கப்பட்டன. பலரும் இக்கருத்துகளுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
“பிற இனத்தவரிடம் பேசும்போதும் பிற மொழி பேசுபவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்தும்போதும், நம்மைத் தனித்துக் காட்டக் கூடிய திறன் தமிழ்மொழிக்கு உண்டு.
“தமிழை ஒரு மொழியாக மட்டும் பாராமல் கலாசாரக் கூறுகளும் நாம் தினமும் பின்பற்றும் நெறிகளும் அடங்கியதாகப் பார்க்கவேண்டும்,” என்று கூறினார் உள்ளூர்க் கலைஞர் கார்த்திகேயன் சோமசுந்தரம்.
தமிழ் நமக்கு ஓர் அடையாளத்தைத் தருவதுடன் இரு மொழிக் கற்றல் நம் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றுகிறது.
“இருமொழி அறிவு இருப்பதால் நம் திறன்கள் வலுப்பெறும். தமிழில் பேசும்போது எங்கிருந்தாலும் எனக்கும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உருவாகி விடுகிறது.
“தமிழ்மொழி நம் அடையாளத்தில் பிணைந்திருக்கும் வேளையில் நாம் வளரும்போது நம்மோடு சேர்ந்து நம் தமிழ்மொழியும் வளரும்,” என்று கூறினார் உள்ளூர் படைப்பாளர் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ஆர்.எஸ்.
இன்றைய காலகட்டத்தில், தமிழ்மொழிப் புழக்கம் குறைந்து வருகிறது. ஆகையால் அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் பொறுப்பு, இளம் தலைமுறையினரிடம் உள்ளது.
“பல்லினச் சூழலில் நாமே நம் மொழியைப் பேசாமல், அதை நம் அடையாளமாக அரவணைக்காமல் இருந்தால் நம் கலாசாரத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எப்படி கற்பிக்கவும் புரியவைக்கவும் முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். தமிழில் பேச முயற்சி எடுப்பது நம் தமிழ் சமூகம் வளர்வதற்கான வழியை அமைத்திடும்,” என்று கூறினார் தெம்பனிஸ் மெரீடியன் தொடக்கக் கல்லூரியில் பயிலும் மாணவி கா.பாரதி.
இதற்கிடையே தமிழ்மொழிப் புழக்கத்தை இளையரிடையே ஊக்குவிப்பதில் பெற்றோரின் பங்கும் இன்றியமையாதது.
“இளம் பிள்ளைகளைத் தாய்மொழியில் பேச ஊக்குவிக்கும் பழக்கம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.
“ஒரு கலாசாரத்தைப் பற்றி கற்றுக்கொள்வதற்கான நுழைவாயிலே மொழியாகும். எனவே, அது இளம் வயதிலேயே விதைக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும்,” என்று கூறினார் மூத்த நிதி ஆலோசகர், கல்பனா சிவன்.
தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டதுபோல் நாம் நம் தாய்மொழியைப் பயன்படுத்துவதைக்கொண்டே அதன் முக்கியத்துவம் அமையும். அதை அளவுகோலாக வைத்துதான் அதன் தேவையும் நிலைக்கும். தமிழ்மொழி ஓர் அதிகாரத்துவ மொழி என்பதற்கும் மேல், நமக்கு ஓர் அடையாளம் என்பதை நாம் உணர வேண்டும். நம் தாய்மொழியை நிலைநாட்ட, சூழல் அமையும்போதெல்லாம் தமிழில் பேச வேண்டிய பெரும்பொறுப்பு இளையர்களாகிய நமக்கு உண்டு.