தாம் படித்த அதே பள்ளியில் இன்று ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் 41 வயது திரு பேட்ரிக் சாகாராமை நாங்கள் எங்கள் நேர்காணலுக்காக அணுகினோம்.
திரு சாகாராம் 1997ல் தமது கல்வியை செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் முடித்துவிட்டு மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார்.
குறிப்பாக தமது மொழிப் பாடங்களில் அவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றதால் மொழி சார்ந்த ஒரு படிப்பை மேற்கொள்ள முடிவெடுத்தார். ஆங்கில மொழியில் இருந்த ஆர்வத்தால் அவர் அதையே ஆழமாகப் படிக்கவும் தீர்மானித்தார்.
எதிர்காலத்தில் எந்த வாழ்க்கைத் தொழில் பாதையைத் தேர்வு செய்வது என்ற யோசனையில் இருந்தபோது, தாம் படித்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறிய ஆலோசனையில் ஆசிரியர் தொழிலைத் தாம் தேர்ந்தெடுத்ததாக திரு சாகாராம் குறிப்பிட்டார்.
கலைத்துறையில் எதிர்காலம் இல்லை என்று பலர் தவறாக எண்ணிவிடுகிறார்கள் என்று கூறிய அவர், அத்துறை பாராட்டப்படாத ஒரு பாதை என்றார். அறிவியல், சட்டம் தொடர்பான டிப்பை மேற்கொள்ள விரும்புவோர், கலைத்துறையில் பகுப்பாய்வு அம்சத்திற்கு முக்கியத்துவம் தரப்படுவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர் என்றார்.
இன்றைய உலக வாழ்க்கைக்குப் பல வகையிலும் உதவும் ஒன்று, இந்த பகுப்பாய்வுத் திறன் என்றும் அவர் கூறினார்.
கலைத்துறை தொடர்பில் ஆராய்ந்துள்ள ஆசிரியர் என்ற நிலையில், அனுபவபூர்வமாக அதன் முக்கியத்துவத்தை அவரால் குறிப்பிட முடிந்தது.
கலைத்துறை சார்ந்த கல்வியின் வழி, மாணவர்கள் வாழ்க்கைத் திறன்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பது அவரின் கருத்து.
அரசியல், கலை ஆகிய துறைகளில் தாம் பயின்ற காரணத்தால் வாழ்க்கையில் தாம் எதிர்நோக்கிய பல சிக்கல்களை, பகுத்தாராய்ந்து தீர்க்க முடிந்ததாகவும் திரு சாகாராம் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
இன்று தமது ஆசிரியர் பணியிலும் அதே திறன் கைகொடுப்பதாக அவர் கூறினார்.