செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் பயின்றதன் மூலம் தாம் இரண்டு முக்கியப் பாடங்களைக் கற்றுக்கொண்டதாக 27 வயது திரு வருண்மூர்த்தி நெடுஞ்செழியன் எங்களிடம் கூறினார். கல்வியில் ஆர்வத்தைத் தூண்டிய இடம் அது. அத்துடன் அன்று கற்ற வாழ்க்கைப் பாடங்களே இன்று தாம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்குக் கைகொடுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
திரு வருண், 2011ஆம் ஆண்டில் எஸ்ஜேஐயில் தம் கல்விப் பயணத்தை முடித்தார். இன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தேவைகள் அறியும் ஆய்வாளராகவும் திட்ட மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போதைய பணிக்காக தேவைப்படும் அடிப்படை அம்சங்களைச் செய்து முடிக்க, உயர்நிலைப் பள்ளியில் கற்றுக்கொண்ட கணிதமும் இதர பாடங்களும் பேருதவி புரிவதாக அவர் கூறினார்.
பள்ளி ஆசிரியர்கள் தமக்குத் துணைபுரிந்த நாள்களை நினைவுகூர்ந்த திரு வருண், பாடத்தையும் மிகுந்த ஈடுபாட்டுடன் தெளிவுற விளக்கிய தம்முடைய உயிரியல் ஆசிரியர் திரு லிம், வரலாற்று ஆசிரியர் திரு டெரன்ஸ் ஆகியோர் தமக்கு உத்வேகமாய் இருந்ததைக் குறிப்பிட்டார்.
ஒரு முறைகூட எரிச்சலடையாமல் பாடத்தைத் தெளிவாகக் கற்பிக்க திரு லிம் முயல்வதுடன் பாடத்தை உற்சாகமாக கற்றுக்கொள்ள புதுப்புது சலிப்பு தட்டாத வழிகளைக் கண்டறிந்து அவர் சொல்லிக் கொடுத்து திரு வருணின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
இதனால் பாடங்களை வெறும் தேர்வுப் பாடங்களாகப் பார்க்காமல் கதையாக பார்க்கும் அணுகுமுறையை அறிந்துகொண்டு தேர்வுகளிலும் திரு வருண் சிறப்பாகச் செய்தார்.
பொதுவாகவே செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் படித்தவர்கள் அனைவரும் ஒரு பெரிய குடும்பம் என்று திரு வருண்மூர்த்தி குறிப்பிட்டார். மற்ற பள்ளிகளில் அதிகம் காணப்படாத இந்த உறவு, தமது முன்னாள் பள்ளியில் உள்ளதாக அவர் பெருமையுடன் கூறினார்.
எங்களிடமிருந்து விடைபெறுவதற்குமுன் அவர், “பிடித்தமானதைச் செய்யும்போது தோல்வி ஏற்பட்டால்கூட அதை வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற ஊக்கம் எப்போதுமே ஒருவருக்குத் தேவை,” என்றார்.