நாம் இன்று நவநாகரிக உலகில் வாழ்கிறோம். ஆனால் வசதிகள் பல இல்லாத ஒரு காலகட்டத்தில் இரண்டு வேலைகளைச் செய்தவாறு படிக்க வேண்டிய சூழ்நிலையில் வளர்ந்தார் திரு லூயிஸ் எல்வின் நாதன்.
கல்வியைக் கைவிடாமல் தேர்ச்சியும் பெற்ற திரு எல்வினை, நாங்கள் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற பெருமிதத்துடன் பேட்டி காண முடிவெடுத்தோம்.
நமது வாழ்க்கையில் நாம் மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று திரு எல்வின் வழியாக நாங்கள் உணர்ந்தோம்.
இன்று 47 வயது திரு எல்வின், ஒரு பொறியாளராக உயர்ந்து தம் பணியிடத்தில் ஒரு குழுவுக்குத் தலைவராக இருக்கிறார்.
வானூர்திகளுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொறுப்பையும் திரு எல்வின் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூரில் பிறந்த இவர், கம்போங் பாருவில் அமைந்திருந்த டி லா சால் தொடக்கப்பள்ளியில் பயின்றார்.
சிறுவயதிலிருந்தே கட்டடங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், தமது வீட்டருகில் நடக்கும் கட்டட வேலைகளைக் கவனித்து வந்தார்.
நெசவுத்தொழில், மருத்துவத் தொழில் அல்லது பொறியியல் துறை ஆகியவற்றிலிருந்து ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, அவர் கட்டடங்கள் மீதிருந்த தம் ஆர்வத்தால் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்தார்.
பொறியியல் துறையில் வேகமான வளர்ச்சி இருக்கும் என்றும் தமக்கு நிறைய வாய்ப்புகள் கிட்டும் என்றும் எண்ணி அதற்கான படிப்பையும் மேற்கொண்டார்.
ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது போல இவருக்குப் பக்கபலமாக இருந்தது இவரின் தாயார்.
மலாய் மொழி படித்து வந்த திரு எல்வினை, கல்வி அமைச்சிடம் பேசி தமிழ்மொழிப் பாடத்துக்கு மாற்றவும் வைத்தார் அவர் அன்னை.
திருமணமான பின், மனைவியிடமும் ஆலோசனை நாடி தம்மை மேம்படுத்திக்கொள்ள திரு எல்வின் முற்பட்டார்.
அவரின் திருமண வாழ்க்கை தொடங்கியபோது குறைவான சம்பளமே அவருக்குக் கிடைத்தது. பெண் குழந்தை ஒன்றும் அவருக்குப் பிறப்பதாக இருந்தது.
அதேசமயம் அவருடைய தாயாருக்கு உடல்நலமில்லாமல் போனது. சிறு வயதில் ஒரு தம்பியும் அவருக்கு இருந்தார்.
இவ்வாறு வாழ்க்கைக்குச் சவால் விடுக்கும் பல பொறுப்புகள் அவரை வந்து சேர்ந்தன.
தம் புதிய பொறுப்புகளைச் சமாளிக்க திரு எல்வின் துணைப்பாட வகுப்புகள் நடத்தினார். அவரிடம் படித்த மாணவர்கள் பலர், இன்று சாதனையாளர்களாக தமக்குப் பெருமை சேர்த்து வருவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குப் பாடங்களையும் கற்பிக்கின்றன என்று கூறிய திரு எல்வின், சவாலைச் சங்கடமாகக் கருதாமல் வாழ்க்கையின் ஓர் அங்கமாக எண்ணி நடைபோட வேண்டும் என்றார்.
செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் தாம் படித்த காலத்தில் தம்முடைய ஆசிரியர் திருமதி சிசிலியா, தமக்கு அதிக ஊக்கமளித்ததாகத் தெரிவித்தார்.
ஓர் ஆசிரியராக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்கினார் அவர் என்று திரு எல்வின் நினைவுகூர்ந்தார்.
பாடங்களுக்கும் பொழுதுபோக்குகளுக்கும் நேரத்தைச் சமமாக ஒதுக்கி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.
தடைகளைக் கண்டு அஞ்சாமல் இன்றுவரை பீடுநடை போட்டு வரும் திரு எல்வினை, எங்கள் தலைமுறையினர் ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கருதுகிறோம்.
படங்கள்: நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், செய்தித் தொகுப்பு: ஹர்ஷிதா பாலாஜி