முழுமைத் தற்காப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமைத் தற்காப்பு 'சேண்ட்பாக்ஸ்' திட்டத்தின் கீழ் 77 யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம், முழுமைத் தற்காப்பு அம்சங்கள் போன்றவற்றைக் கருதி தேர்வாகின.
இதில் 'கொலை மர்மம் தொடர்பாக பாத்திரமேற்றல்' விளையாட்டும் ஒன்று. கேலப் டான், ஷெங் ஜியான்காய் ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட இவ்விளையாட்டில், குற்றம் நடந்த கற்பனைச் சூழலில் கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை ஆராய வேண்டும். தீவிரவாதம், பருவநிலை மாற்றம் போன்ற வெவ்வேறு அச்சுறுத்தல்களைப் பற்றிய விழிப்புணர்வை விளையாட்டு ஏற்படுத்துகிறது.
இம்மாதம் 22-26 தேதி வரை பொதுமக்கள் சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டருக்குச் சென்று இந்த விளையாட்டில் இலவசமாகப் பங்குபெறலாம். விளையாட்டிற்குப் பதிவு செய்ய https://go.gov.sg/tdmmrp என்ற இணையத்தளத்தை நாடலாம்.
கோபுரத் தற்காப்பு விளையாட்டு, முழுமைத் தற்காப்புத் தடம் 2.0, சமூகத்தில் அவசரகாலச் சம்பவங்கள் தொடர்பான பாவனைப் பயிற்சி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற மூன்று திட்டங்களாகும்.
ராணுவம், சமூகம், பொருளியல், மின்னியல், உளவியல், குடிமைத் தற்காப்பு என்ற ஆறு முழுமைத் தற்காப்பு அம்சங்களையும் இவை வெளிக்காட்டும்.
"இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவு, உற்சாகம் அளிப்பதாக உள்ளது. நமது அன்றாட வாழ்வில் முழுமைத் தற்காப்பு கொண்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக தேர்வான இத்திட்டங்கள் விளங்குகின்றன," என்று நெக்சஸ் நிறுவனரான கொலொனல் கொ ஜெரிக்கா கூறினார்.
முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி மேலும் பல நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தொடர்ந்து மே 11ஆம் தேதி வரை முழுமைத் தற்காப்பு 'சேண்ட்பாக்ஸ்' திட்டத்திற்குத் தங்களது யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம்.

