தமிழ்மொழியும் பரதக்கலையும் சங்கமிக்கும் வகையில் 'கவியும் நாட்டியமும்' என்ற பரதநாட்டியப் போட்டி நிகழ்ச்சி அமைந்திருந்தது. தமிழ்மொழி விழாவை ஒட்டி நான்காவது ஆண்டாக நடந்த இப்போட்டியில் ஏறத்தாழ 40 நடனமணிகள் பங்கேற்றனர்.
'ஓம்கார் ஆர்ட்ஸ்' நடன அமைப்பும் பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த போட்டி இம்மாதம் 16ஆம் தேதி பெக் கியோ சமூக மன்றத்தில் இடம்பெற்றது.
இளம் நடனமணிகள் பலர் கலந்துகொண்ட இப்போட்டிக்கு வளர்தமிழ் இயக்கமும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் கழகமும் ஆதரவு நல்கின.
பங்கேற்பாளர்கள் தமிழ்ப் பாடலைத் தேர்ந்தெடுத்து, அதில் புதைந்திருக்கும் கவிப்பெருமைகளையும் படைக்க இருந்த நடனத்தையும் பற்றி வருணித்து, தங்களது நடனத்தைத் தொடங்கினர். தமிழ்ப் பின்னணியைக் கொண்டிராத நடனமணிகளும் தமிழ்மொழியில் தங்களது வருணனையை அருமையாகப் படைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
"போட்டிக்குத் தயாரான போது கருத்துள்ள பல தமிழ்ப் பாடல்களை அறிந்தேன். நடனமும் தமிழும் இணைந்த இப்போட்டி, அவ்விரண்டிலும் என் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளித்தது," என்றார் இளநிலையர் பிரிவு வெற்றியாளர் ஷ்ரியா சதீஷ்.
'ஓம்கார் ஆர்ட்ஸ்' நடன அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதேவி சிவராஜசிங்கம், "தமிழ்மொழி விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியில் கலந்துகொண்டதன்மூலம் நடனமணிகள் பாடல்களை இயற்றியவர்களின் நோக்கங்களைப் புரிந்து, தமிழ் மொழியின் அழகை உணர்ந்து, தமிழ்ப் பற்றை வளர்த்துக்கொள்வர் என்று நம்பினோம். கவிநயம் மிக்க பல அழகிய தமிழ்ப் பாடல்களை அவர்கள் கண்டறிந்தனர் என்றும் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
செய்தி: சபிதா ஜெயகுமார்

