கல்விச் சுற்றுலாவில் வாழ்க்கைப்பாடம்

2 mins read
cf1a41d1-9bf2-4fb7-a40a-055f6a3b4362
-

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யோங் லூ லின் மருத்­து­வப் பள்­ளி­யில் மூன்­றாம் ஆண்டு மருத்­துவ மாண­வி­யான கீர்த்­தனா, அண்­மை­யில் இந்­தி­யா­விற்கு மேற்­கொண்ட கல்­விச் சுற்­றுலா மூலம் வகுப்­ப­றைக்கு அப்­பாற்­பட்ட வாழ்க்­கைப் பாடங்­க­ளை­யும் கற்­றுக்­கொண்­டார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் ஆண்­டு­தோ­றும் ஏற்­பாடு செய்­யும் 'ஸ்டி­யர்' (STEER) திட்­டத்­தின்கீழ், 21 வயது தங்­க­ராஜா கீர்த்­தனா சமூக, பண்­பாட்டு, பொரு­ளா­தார ரீதி­யான மாற்­றங்­க­ளைக் கண்டு வரும் நாடு­க­ளைக் கல்விச் சுற்­றுலா மூலம் அறிந்­து­கொள்­ளும் வாய்ப்­பைப் பெற்­றார்.

கடந்த மாதம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பத்து நாள் சுற்­று­லா­வில் இந்­தி­யா­வின் கேரளா, டார்­ஜி­லிங், கோல்­கத்தா ஆகிய இடங்­களுக்­குச் சென்­றி­ருந்­தார் இவர்.

கேர­ளா­வின் ஆலப்­புழா நக­ரத்­துக்­குச் சென்­றி­ருந்­த­போது படகு வீடு­களில் தங்­கி­யி­ருந்த கீர்த்­தனா அந்த நக­ரத்­தின் எழி­லைக் கண்டு மலைத்­துப் போன­போ­தும் அங்­கு போக்­கு­வ­ரத்து வெறும் நீர்­வ­ழி­தான் என்­பதை உணர்ந்­தார்.

கிரா­ம­வா­சி­கள் மீன் பிடித்து வரு­மா­னம் ஈட்­டி­ வருகின்றனர். அத்­து­டன் வெள்­ளம் ஏற்­பட்­டால் மக்­கள் அடைக்­க­லம் புகு­வ­தற்­குத் திட­மா­ன­தொரு வீடும் இல்லை. மருத்­து­வம் சார்ந்த அனு­ப­வத்­தைப் பெற்­றுக்­கொள்­ளும் நோக்­கில் கீர்த்­தனா ஆலப்­பு­ழா­வில் இருக்­கும் செயின்ட் அந்­தோ­னிஸ் மருத்­து­வ­ம­னை­யைப் பார்­வை­யிட்­டார்.

அறுவை சிகிச்சை செய்­வ­தற்கு ஒரு சிறிய அறை கூட இல்­லா­த­போ­தும் இருக்­கும் வச­தி­க­ளைக் கொண்டு மக்­கள் அனு­ச­ரித்து வாழ்­கின்­ற­னர்.

அவர் அடுத்து டார்­ஜி­லிங் நக­ரத்­தின் புற­ந­க­ரில் அமைந்­துள்ள லாமா­கோ­வான் கிரா­மத்­திற்­குச் சென்­றார்.

கர­டு­மு­ர­டான சாலை­களும் செங்­குத்­தான மலைப் பாதை­களும் நிறைந்த அவ்­வி­டத்­தில் கிரா­ம­வா­சி­கள் தொலை­வில் உள்ள ஓர் அரு­வி­யி­லி­ருந்து தண்­ணீர் கொண்­டு­வர வேண்­டி­யி­ருந்­தது. மலைப் பகு­தி­யில் வாழ்­வ­தால் மக்­கள் குளிர் வெப்­ப­நி­லை­யைத் தாங்­கிக்­கொள்­ள­வும் வேண்­டும். கிரா­மத்­தில் ஐந்து நாள்­கள் ஒரு பள்­ளி­யின் அரு­கா­மை­யில் இருக்­கும் தங்­கு­வி­டு­தி­யில் கீர்த்­தனா தங்­கி­னார்.

மவுண்ட் கார்­மல் பள்­ளிக்­குச் சென்­றி­ருந்த கீர்த்­தனா, அங்கு மாண­வர்­கள் 12ஆம் வகுப்பு வரை மட்­டுமே பயில முடி­யும் என்­பதை அறிந்­தார். மேற்­ப­டிப்­புக்கு அவர்­கள் டார்­ஜி­லிங் நக­ரத்­திற்­குச் செல்ல வேண்­டும். சுற்­றி­லும் மலை­கள் நிறைந்த பகுதி என்­ப­தால் நெடு­கி­லும் செங்­குத்­தான பாதை­கள்.

அதே­போல் மருத்­து­வச் சேவை நாட­வும் கிராம மக்­கள் ஒரு மணி நேரம் பய­ணித்து டார்­ஜி­லிங் செல்ல வேண்­டும்.

அவ்­வாறு நக­ரத்­தில் இருந்த பிஜான்­பாரி ரூரல் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்ற கீர்த்­தனா, மருத்­து­வ­ம­னை­யில் ஒரே ஒரு மருத்­து­வர் இருப்­பதை அறிந்­து­கொண்­டார். அறுவை சிகிச்­சைக்­கான அறை செயல்­பாட்­டில் இல்லை, சுகா­தார வச­தி­யும் அதி­க­மில்லை.

விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­திய தனது கல்­விச் சுற்­று­லாவை அடுத்து இனி வர­வி­ருக்­கும் விடு­மு­றைக் காலங்­களில் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று அங்­கி­ருக்­கும் வச­தி­கு­றைந்த மக்­க­ளுக்கு உத­வும் முனைப்­பு­டன் உள்­ளார் இளை­யர் கீர்த்­தனா.

செய்தி: அனுஷா செல்­வ­மணி