இயற்கை, சுற்றுப்புறப் பாதுகாப்பில் அரும்பங்காற்றிய பத்து இளையர்களுக்கு ‘10 ஃபோர் ஜீரோ’ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை சூழல், நிலையான வளர்ச்சி, பருவநிலை பாதுகாப்பு ஆகியவை மீது ஆர்வமுள்ள இளையர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டுவதற்கும் அங்கீகரிப்பதற்கு ‘கன்சர்வேஷன் இன்டர்நேஷனல்’ அமைப்பு இந்தவிருதை மே 24ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இளையர்கள் அனைவரின் கடமையுணர்வு, உழைப்பு, உற்சாகம் ஆகியவற்றைப் பாராட்டுவதாக ‘கன்சர்வேஷன் இன்டர்நேஷனல்’ வாரியத்தின் அறங்காவலரும் விருதுகளுக்கான நடுவருமான திருவாட்டி கெட்டலின் டான் தெரிவித்தார்.
விருதுபெற்ற அந்தப் பத்து இளையர்கள், அனைத்துலகச் சுற்றுப்புற நிபுணர்களின் வழிகாட்டுதலையும் பயிற்சியையும் பெறவுள்ளனர். வெளிநாடுகளில் நடைபெறும் பருவநிலை சம்பந்தப்பட்ட உச்சநிலை மாநாடு, வெளிப்புற ஆய்வு, பயிலரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு தங்களது தொடர்பு வட்டங்களை விரிவுபடுத்தும் வாய்ப்பினைப் பெறுவர். விருதுபெற்றோரில் இந்தியர்களான இருவரைத் தமிழ் முரசு பேட்டி கண்டது.
பன்முகத்தன்மையைக் காப்பதில் முனைப்பு
சிறுவனாக இருந்தபோது சராவாக்கில் ஓராங் ஊத்தான் குரங்குகளைக் கண்டதால் பூத்த களிப்பு, இயற்கையின் பன்முகத்தன்மையைப் பேணவேண்டும் என்ற கடப்பாடாக முகம்மது நஸ்ரி அப்துல் நாசிரின் மனதில் வளர்ந்தது. சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நஸ்ரி வழிகாட்டியாகப் பணியாற்றி இந்தத் துறையில் அனுபவத்தை மெல்லச் சேகரிக்க ஆரம்பித்தார்.
அப்போதுள்ள ஜூரோங் பறவைப் பூங்காவின் பறவை மருத்துவமனையில் விலங்கு தாதியராகப் பயிற்சி பெற்றதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் இந்த 24 வயது இளையர்.
“சிங்கப்பூரைப் பூர்விகமாகக் கொண்ட பல்வேறு பறவைகளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்தேன். அங்கு தொடங்கிய என் ஆர்வத்தை உள்ளூர் இயற்கைக் குழுக்கள் மேலும் மூட்டின,” என்று அவர் கூறினார். பின்னர், ‘பன்முகத்திற்கான சிங்கப்பூர் இளையரின் குரல்கள்’ என்ற அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் அதில் சேர்ந்தார்.
இயற்கைப் பன்முகத்தன்மையைப் பற்றிய கொள்கை ஆய்வின் மீது கவனம் செலுத்தும் இந்த அமைப்பு, மிக உயர்ந்த நிலையில் ஏற்படும் முடிவுகளில் இளையர்களும் பங்களிக்கலாம் என்பதை நஸ்ரிக்கு உணர்த்தியது.
2020ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் சேர்ந்த நஸ்ரி, கடந்த ஆண்டு அதன் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தினால் இயற்கை அபாயம் ஏற்படக்கூடிய இடங்களுக்குச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யும் ‘அருகிவரும் இருப்பிடங்கள்’ இயக்கத்தை அவர் அறிமுகம் செய்திருக்கிறார்.
தூய்மைப்படுத்துவதில் ஆர்வம்
கடலோரப் பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார் 27 வயது யாசீர் அமீன். கடற்கரைகளின் தூய்மையைப் பராமரிக்கும் ஈஸ்ட் கோஸ்ட கடற்கரைத் திட்டத்தின் இணைத் தலைவராக அவர் செயலாற்ற ஆரம்பித்தார்.
இந்த நடவடிக்கை மூலம் தன்னைப் போல சிந்திக்கும் பலருடன் தொடர்பில் இருக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.
“சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்த பலர் வருவதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
பிறநாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரின் கடலோரத் தூய்மை நல்ல நிலையில் இருப்பதால் அதுபற்றி பலர் அதிகம் யோசிப்பதில்லை என்றாலும் சுற்றுப்புறத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள அங்கு சென்று சேவை செய்ய அமீர் ஊக்குவிக்கிறார்.
“இத்தகைய திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் சிங்கப்பூரின் கடலோர, கடல்சார் சுற்றுப்புறங்களை என்னால் மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது. கழிவு நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களையும் துப்புரவுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது,” என்று அவர் கூறினார்.
கழிவு நிர்வாகத்தில் தமது திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல கடந்த ஆண்டின் முற்பகுதியில் அமீர் ‘ஸ்ட்ரைடி’ அமைப்பில் அதன் சமூக, திட்டத் தலைவராகச் சேர்ந்தார்.
அதே ஆண்டில் அவர் அதன் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். பயனீட்டாளர்கள் தாங்கள் பெருக்கும் குப்பையை ஊக்குவிக்கும் ‘ஸ்ட்ரைடி’ செயலி தற்போது 74 நாடுகளில் 5,700 பேரால் பயன்படுத்த பட்டு வருகிறது.