சபிதா ஜெயகுமார்
அச்சங்கள் பலவற்றை வென்று படைப்பிரிவு தளபதியாக தனது பயணத்தைத் தொடர ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் இளைஞர் கார்த்திக் ராஜ் கருணாநிதி.
மின்னல் படையைச் சேர்ந்த கார்த்திக், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி அதிகாரி பதவி நியமன அணிவகுப்பில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இரண்டாம் லெஃப்டினண்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ள 21 வயது கார்த்திக் ராஜ் வரும் காலத்தில் அவர் மேற்பார்வையின்கீழ் இருக்கும் அணியை சிறப்பாக வழிநடத்த நோக்கம் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமது தேசிய சேவையைத் தொடங்கிய கார்த்திக், பல்வேறு சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்கினார்.
"ஒவ்வொருநாளும் புதிய சவால்கள் தோன்றின. ஆனால் அவற்றைச் சமாளித்துப் பணியைச் செய்து முடிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டேன்," என்று குறிப்பிட்டார் கார்த்திக்.
கடினமான அடிப்படை ராணுவப் பயிற்சியிலும் அது கற்றுத்தந்த பாடங்களையும் வழங்கிய அனுபவங்களையும் பக்குவத்துடன் கார்த்திக் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் பரிச்சயமான அடிப்படைத் திறன்களை அந்தப் பயிற்சி தமக்குக் கற்றுக் கொடுத்தது என்றார் கார்த்திக்.
பின்பு மின்னல் படைத் தளபதி பிரிவு பயிற்சித் திட்டத்தில் இணைந்துகொண்டார் கார்த்திக்.
"அங்கு மீள்திறன், பொறுப்புணர்ச்சி முதலிய முக்கிய விழுமியங்களைக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, தலைமைத்துவத்தின் அர்த்தத்தை இந்தப் பயிற்சி எனக்குக் கற்றுத் தந்தது. நான் பங்கெடுத்த ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் எனது திறன்களை மேம்படுத்தியது. அதனால் என் தேசிய சேவை அனுபவமும் செழுமையானது," என்று தெரிவித்தார் கார்த்திக்.
ஆறு மாதப் பயிற்சியில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபடுவது கார்த்திக்கிற்குக் கடினமாக இருந்தது. பயிற்சியை ஏன் தொடர வேண்டும் என்ற கேள்விகள் அவ்வப்போது தமது மனதில் தோன்றியதாக அவர் கூறினார்.
ஆனால் பயிற்சியைத் தொடர எடுத்த முடிவு பலன் தந்துள்ளதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
"உயரமான இடங்களில் இருப்பது எனக்குப் பயத்தை ஏற்படுத்தும். தளபதியாகப் பயிற்சி பள்ளியில் சேர்ந்தபோது வான்குடை சாகசம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.
"ஹெலிகாப்டரில் இருந்து வெளியே அடி எடுத்து வைக்க என்னால் முடியவில்லை. என்னைப் போன்ற, பயந்தவர்கள் அதைச் செய்ததைக்கண்டேன்.
"என்னால் முடியும் என்ற உணர்வும் பயிற்றுவிப்பாளர்களின் உந்துதலும் தடைகளைத் தாண்ட உதவின," என்று பகிர்ந்து கொண்டார் கார்த்திக் ராஜ்.
பயிற்சி அதிகாரிப் பள்ளியில் அவருக்குத் துணையாக இருந்த தளபதிகள் மாணவர்களை முன்னிலைப்படுத்தி செயல்பட்டனர். எவ்வளவு வேலைப் பளு இருப்பினும் சக வீரர்களின் நிலையைப் புரிந்து நடந்துகொண்டனர்.
"இவர்கள் போன்ற ஒரு சிறந்த தலைவராக வளர்ந்து மிளிர ஆசைப்படுகிறேன். அவர்கள் அளித்த ஊக்கம்தான் என்னை இந்தப் பாதையில் செல்ல ஊக்குவித்தது," என்று கூறினார் கார்த்திக்.
sabitha@sph.com.sg

