இளம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் சிறந்த இளம் கல்வியாளர் விருதுகள்

இளம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் சிறந்த இளம் கல்வியாளர் விருதுகள்

3 mins read
a698f192-c25c-4b60-82f3-05de52b8d519
குமாரி பூர்ணிமா ஜனனி சம்பத் குமார் - படம்: சிங்கப்பூர் கல்வியமைச்சு 
multi-img1 of 3
Google News Preferred Icon

பாடங்களைக் கற்றுக்கொடுப்பதோடு நில்லாமல், மாணவர்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவது, கேள்வி கேட்க வைப்பது, தன்னம்பிக்கை உடையவர்களாக்குவது ஆகியவையும் ஆசிரியரின் பணிகள்தான்.

இவ்வாறு கற்றல் ஆர்வத்தை தூண்டும் ஆசிரியர்களுக்கு சிறந்த இளம் கல்வியாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

35 வயதிலும் அதற்கு குறைந்த வயதிலும் உள்ள ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.

ஜூலை 7ஆம் தேதியன்று நடந்த தேசியக் கல்விக் கழக ஆசிரியர்கள் பதவியேற்பு (Investiture) விழாவில் இவ்விருது கல்வி இரண்டாம் அமைச்சரான டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மானால் அளிக்கப்பட்டது.

கடந்த 1999ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரையில் 102 ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.

10 இறுதிக்கட்ட தேர்வாளர்களிலிருந்து ஆறு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதைப் பெற்ற ஆசிரியர்களில் ஒருவர் தான் குமாரி ஷோபனா ஸ்ரீதரன், 29.

“இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. கல்வித்துறையில் மேலும் சாதிக்க ஊக்கமளித்துள்ளது இவ்விருது,” என்று குமாரி ஷோபனா கூறினார்.

ஹோலி இன்னசென்ட்ஸ் தொடக்கப்பள்ளியில் நான்கு ஆண்டுகளாக ஆங்கிலம், கணிதப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் இவருக்கு இவரது தாயார் முன்மாதிரியாக விளங்கினார்.

சிறு வயதிலிருந்தே தனது கற்பித்தல் அனுபவங்களை குமாரி ஷோபனாவுடன் பகிர்ந்துகொண்டார் ஆசிரியராக இருந்த அவரது தாயார்.

மேலும், இவர் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இளையர் ஆய்வுப்பயணத் திட்டப்பணி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

போராலும் சுனாமியாலும் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட இலங்கை பகுதியில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் பங்கு வகித்தார் குமாரி ஷோபனா.

தன்னால் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து ஆசிரியர் பணியின் மீது ஒரு தனி ஆர்வம் கொண்டார் இவர்.

“ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது சமூகத்தில் ஓரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவது தான் வெற்றிக்கான பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதை நான் வலியுறுத்துவதுண்டு. தனித்துவமான சிந்தனையைத் தூண்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற முறையில் கற்பித்தல் முக்கியமாக அமைகின்றது,” என்று குமாரி ஷோபனா கூறினார்.

விருது பெறாவிட்டாலும் இறுதி சுற்றி வரை சென்றுள்ள குமாரி பூர்ணிமா ஜனனி சம்பத் குமார், 33, ஓர் ஆசிரியராக இருப்பதையும் தாண்டி தனது மாணவர்களுடன் ஒரு நெருக்கமான பிணைப்பு கொண்டுள்ளார்.

“எனது பள்ளி என்னை நியமித்து இறுதிச்சுற்று வரை நான் சென்றுள்ளதே எனக்குப் பெருமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நான் பள்ளிக்குச் செல்லும்பொது மாணவர்களிடம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் என் வாழ்க்கை மீது கொண்டுள்ள அர்த்தத்தையும் உணர்கிறேன்,” என்று குமாரி ஜனனி கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கணிதப்பாடம் கற்றுக்கொடுக்கும் இவர், தற்போது கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

பிள்ளைகளின் மழலை, சுட்டித்தனம் என அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் சூழலில் பணிபுரிவதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார் இவர்.

“பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதையும் தாண்டி அவர்கள் விழுமியங்கள் நிறைந்த சூழலையும் அவர்களது மனநலத்தைக் கருத்தில் கொண்ட சூழலையும் ஏற்படுத்திக் கொடுப்பதை எனது கடமையாகப் பார்க்கிறேன்,” என்று குமாரி ஜனனி பகிர்ந்துகொண்டார்.

dhurga@sph.com.sg

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்