கையடக்கத் தொலைபேசி வேண்டாம்….கையடக்கப் புதிர்களை நாடுங்கள், என்கிறார் 27 வயது வயிரவன் இராமநாதன்.
‘புரோஜெக்ட் எனிக்மா’ எனும் சமூகநோக்கு நிறுவனத்தை வழிநடத்தும் இவர், கையடக்கப் புதிர்களையும் புதிர்சார்ந்த விளையாட்டுகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வழிகளில் வழங்கிவருகிறார்.
இப்புதிர்கள் உலகெங்கிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து திரட்டப்பட்டவை. கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பின்லாந்து, தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இவற்றுள் அடங்கும். சிங்கப்பூரில் இவ்வகைப் புதிர்களை காண்பதென்பது மிக மிக அரிது, என்கிறார் இராமநாதன்.
இவை குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மட்டுமல்ல; இப்புதிர்களில் பெரும் பங்கை பதின்ம வயதைத் தாண்டியவர்களும் பெரியோருமே முழுமையாக ரசிக்க முடியும் என்று கூறுகிறார். மறதி நோய், சாதனங்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துதல், போன்றவற்றிலிருந்து தற்காக்கப் புதிர்கள் உதவுவதாகவும் சொல்கிறார்.
“நான் சிறுவயதிலிருந்து 1,700க்கும் மேற்பட்ட புதிர்களைச் சேகரித்து வந்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒருவிதம். எனது முழுநேர இராணுவச் சேவையின்போது அதிகாரிகளுக்கான ஓய்வறையில் ஒரு புதிர்மூலையை அமைப்போம் என்ற யோசனையை முன்வைத்து அனுமதியும் பெற்றேன். ஆனால் அதை செயல்படுத்துவதற்குள் என் ‘ஓஆர்டி’ தேதி வந்துவிட்டது. இருப்பினும், புதிர்களால் மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. இதில் நிறைய வாய்ப்புகள் இருப்பதையும் உணர்ந்தேன்,” என்கிறார் இராமநாதன்.
அதன் விளைவாக 2016ல் பிறந்த யோசனையான ‘புரோஜெக்ட் எனிக்மா’, 2021ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் வழங்கிய ஆதரவைக் கொண்டு உயிர்பெற்றது. அதன்பின் தை ஹ்வா குவான் தொண்டு நிறுவனம், ஃபிலிப் யோ இனிஷியேட்டிவ், தேசிய இளையர் மன்றம், இளையர் கோலேப் ஆகிய அமைப்புகளின் ஆதரவையும் பெற்றது.
இதுவரை இராமநாதனின் குழுவினர் விதவிதமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
‘ஸ்பார்க்பாக்ஸ்’ எனும் மாதாந்தர புதிர் இரவல் பெட்டியின்வழி, விற்பனைக்குப் பதிலாக புதிர்களை இரவலுக்குக் கொடுத்து மலிவான விலையில் முழு அனுபவத்தையும் வழங்குகின்றனர்.
இதன்வழி புதிர்கள், ஒருவர் விளையாடிய பின்னர் வீட்டில் தூசி படிந்து வீணாகாமல், ஒவ்வொரு மாதமும் மறுவாழ்வு பெறுகின்றன. சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்தன்மைக்கும் இவை வழிவகுக்கின்றன.
மற்றொரு திட்டம் - ‘பஸுல்டோபியா’ எனும் புதிர்க் கண்காட்சி-நூலகம். இங்கு குடும்பத்தினர், தோழர்கள், சக பணியாளர்கள் காட்சியில் வைக்கப்பட்டுள்ள எந்த புதிரையும் கையில் எடுத்து விளையாடலாம். இங்கிருந்து மலிவான வாடகையில் புதிர்களை இரவல் பெறலாம் அல்லது வாங்கலாம். சமீபத்தில் ரிவர்வாக், 20 அப்பர் சர்குலர் சாலைக்கு இடம்பெயர்ந்துள்ளது.
‘ஆஹா கார்னர்’ எனும் புதிர்ச்சாவடியின் மூலம் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் ஏறத்தாழ 3000 சிங்கப்பூர்வாசிகளுக்குப் புதிர்களைக் கொண்டுசென்றுள்ளனர். அடுத்து, 23 செப்டம்பர் அன்று, புளோக் 872, உட்லண்ட்ஸ் சாலை 81இல் மாலை 12 முதல் 3 மணி வரை உட்லண்ட்ஸ் வட்டாரம் 3 குடியிருப்பாளர் தொடர்புக் கட்டமைப்பு ஏற்பாடுசெய்யும் நிகழ்ச்சியில் மக்கள் இதனை நேரில் கண்டு விளையாடலாம்.
இராமநாதனின் முயற்சிக்குப் பெற்றோரும் மிகவும் துணைபுரிகின்றனர்.
“புரோஜெக்ட் எனிக்மா ஒரு சமூக நோக்கு கொண்ட புதிய முயற்சியாகவும் இருந்தது எங்களுக்கு பிடித்திருந்தது.
இது ஒரு புதுமுயற்சி என்பதால் பல முடிவுகளை எடுக்கும் முன் குடும்பமாக விவாதம் செய்து யோசனைகளை முன் வைப்போம். அந்தத் தருணங்கள் மகிழ்ச்சியானவை. தவிரவும் இது சம்பந்தமான எல்லாவிதமான வேலைகளிலும் எங்களை இணைத்துக் கொள்வதும் மன நிறைவைக் கொடுக்கிறது.
ஒருவருக்கு ஆழ்விருப்பம் எதுவோ அதுவே தொழிலாகவும் அமைவது சிறப்பு. இராமநாதனுக்கும் அப்படி அமைந்தது. அதில் அவன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது,” என்று அவரது பெற்றோர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
புதிர்களால் மக்களிடம் வியப்பை உண்டாக்கி இவ்வுலகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசையைத் தூண்டி, உலகெங்கும் எதிர்நோக்கும் சவால்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை கண்டுபிடிக்க ஊக்கப்படுத்துகின்றது புரோஜெக்ட் எனிக்மா.
மேல்விவரங்களுக்கு https://www.projectenigma.org/ இணையப்பக்கத்தை அணுகலாம்.
குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் புதிர்மூலம் இணைய மக்களை வரவேற்கிறார் வயிரவன் இராமநாதன்.