காதல் ஒருவரின் மனத்தில் விண்மீனைப்போல ஒளியூட்டும் சக்தி கொண்டது என்ற கருப்பொருளுடன் ஷபீர் சுல்தானின் புதிய பாடலொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
காதலின் உள்ளார்ந்த பொருள், இணையுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற கருத்தியல்கள் உலகம் தோன்றிய காலந்தொட்டு வேரூன்றி நிற்பவை என்கிறார் ஷபீர்.
சுஃபி தத்துவங்கள், தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆழமாக இவர் விரும்புவதால் அவற்றின் தாக்கத்தை இப்பாடலில் உணரலாம்.
முன்பு ஷபீர் படைத்த ‘ருபாயத் கவிதை’, ‘ ஆயிழை’ என்ற பாடல்களும் இதே தாக்கத்தைக் கொண்டிருந்ததோடு, அவையும் காதலை முன்னிலைப்படுத்தின. ‘விண்மீன்’ பாடலும் அவற்றைத் தொடர்ந்து காதலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றது.
செப்டம்பர் 29ஆம் தேதியன்று வெளியான இப்பாடலில் ஷபீருடன் இணைந்து சென்னையைச் சேர்ந்த பாடகி பிரித்திவியும் பாடியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ‘அகலாதே’ என்னும் பாடலுக்குக் குரல் கொடுத்தவர் இவர்.
சென்ற மாதம், செப்டம்பர் 29ஆம் தேதி நள்ளிரவில் ஷபீரும் பிரித்திவியும் இன்ஸ்டகிராம் சமூக ஊடகம் வழியாக நேரலையாக பொதுமக்களுடன் சேர்ந்து பாடலைக் கேட்டு ரசித்தனர்.
சென்னையில் நடைபெற்ற ‘சென்னை டைம்ஸ் ஃபிரஷ் ஃபேஸ்’ என்னும் திறன் போட்டியின் 11ஆம் பதிப்பில் பிரித்திவி பங்கெடுத்தபோதுதான் ஷபீர் அவரை முதன்முதலில் சந்தித்தார். இப்போட்டியில் வெற்றி பெற்ற பிரித்திவியின் குரல் வளமும் அவருடைய பாடல் பாணியும் ஷபீரை மிகவும் கவர்ந்தன. பிரித்திவியின் குரல் ‘விண்மீன்’ பாடலுக்கு உகந்ததாகவும் அதற்கு சுவையூட்டியுள்ளதாகவும் நம்புகிறார் ஷபீர்.
இந்தப் பாடலில் தமிழ், ஆங்கிலச் சொற்கள் கோவையாக உள்ளன. மெல்லிசை மட்டுமல்லாமல் நம் கால்களை ஆட வைக்கும்படியாகவும் பாடலின் தாளம் அமைந்துள்ளது.
“தமிழிசை கடல் கடந்து ஒலிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. தமிழ் பாடல்களில் ஆங்கிலச் சொற்களை அழகாகவும் கலைநயத்துடனும் சேர்க்கும்போது இன்னும் பலர் நம் பாடல்களை விரும்பிக் கேட்பார்கள்,” என்றார் உள்ளூர்ப் பாடகர் ஷபீர்.
ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப் பாடல்களில் இடம்பெறும்போது அது மக்களை ஈர்க்கும் அம்சமாக அமைந்தாலும் ரசிகர்கள் தம்மிடம் தமிழ் மிகவும் அழகான மொழி என்று கூறியுள்ளதாக பகிர்ந்துகொண்டார் அவர். இவ்வாறு தமிழ்ப் பாடல்களை உலகம் முழுக்க இருக்கும் மக்கள் கேட்கத் தூண்டுவதற்கு பங்களிப்பதில் இன்பம் காண்கிறார் அவர்.
‘விண்மீன்’ பாடலுடன் சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு பாடல்களும் ‘நகரகவி’ என்ற ஷபீரின் புதிய இசைவட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த இசைவட்டை மக்கள் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் என்றார் ஷபீர்.
இவ்விசைவட்டில் இடம்பெறவுள்ள அனைத்துப் பாடல்களும் ‘தமிழ் இண்டி பாப்’ என்ற வகையில் மக்களிசைப் பாடல்களாக அமைகின்றன. தன்னை ‘தமிழ் இண்டி பாப்’ இசைக் கலைஞராக அடையாளம் காணும் ஷபீர், “மற்றவர்கள் செய்வதையே நானும் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கென ஒரு தனிப் பாதையை அமைக்க வேண்டும் என்பதே என் கொள்கை,” என்றார்.
எனவே, தமது பாதை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அது தனித்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்ற வேட்கையோடு, தொடர்ந்து மக்கள் ரசிக்கும் வண்ணம் பாடல்களை உருவாக்க விரும்புகிறார் ஷபீர்.
‘நகரகவி’ என்னும் தம் புதிய இசைவட்டின் மூலம் மீண்டும் மக்கள் உள்ளங்களைக் கவர முடியும் என்று நம்புகிறார் அவர்.