விஷ்ணு வர்தினி
பிரியாவிடைகள் எவ்வளவு கடினமாக இருக்கின்றவோ அதுபோல் சிலசமயம் புது தொடக்கங்கள்.
சென்ற ஆண்டின் எதிர்மறை அனுபவங்களைச் சற்று கைவிட்டு, இவ்வாண்டு ஆக்கபூர்வமாக அமையவேண்டி திட்டங்கள், குறிக்கோள்கள், வருமான இலக்குகள் எனப் பலவற்றையும் வகுப்போம்.
நம்மை முற்றிலும் புது மனிதராக மாற்றிக்கொள்ளவேண்டும் எனும் பெருவேட்கை ஏற்படும்.
எத்தனை முறை புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுத்தாலும் அவ்வேட்கை மீண்டும் மீண்டும் துளிர்விடத் தவறுவதில்லை.
ஆண்டுதோறும் தவறாமல் ஆக்கத்தைத் துரத்திக்கொண்டிருப்பது எனது வழக்கம். பலவகைகளில் எண்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. அப்படி எண்ணளவிலான ஆக்கத்தைத் தொடர்ந்து துரத்துவதனாலேயே அதன்மீது வெறுப்பு ஏற்பட்டாலும், இத்தகைய ஆக்கம்தான் நம் சூழலில் முக்கிய வெகுமானம் அளிப்பதாகத் தோன்றுகிறது.
இளையர்கள் ஆக்கப்பூர்வமான மாணவர்களாக, பின்னர் ஊழியர்களாக, தலைவர்களாக வளர்த்தெடுக்கப்படும்போது, குறிப்பிட்ட வகை ஆக்கமே வாழ்வில் மையப்புள்ளியாகிவிடுகிறது. இவ்வாண்டு இம்மீளா வட்டத்திலிருந்து சற்று விலகி, குறிக்கோள்களை மனநிறைவின் அடிப்படையில் வடிவமைப்பது என் எண்ணம்.
இரைச்சலான மனத்தை இரைச்சலாகவே வைத்திருக்கப் பிடித்திருக்கிறது பலருக்கு. இரவில் நிம்மதியாகத் தூங்கவேண்டி பல மணி நேரம் சமூக ஊடகப் பக்கங்களை வருடிப் பார்க்கிறோம். போக்குவரத்துப் பயணங்களில் ஓயாமல் பாடல்களைப் போட்டுக் கேட்கிறோம்.
கடந்த ஆண்டு எண்ணங்களிலிருந்தும் உணர்வுகளிலிருந்தும் எப்போதுமே ஓடுவதுபோல உணர்ந்தேன். அதனால், இவ்வாண்டு எனக்காக நான் மேற்கொள்ளும் ‘ஆக்கமற்ற’, அதாவது எண்களால் மதிப்பிட முடியாத, வேலைகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க முடிவெடுத்துள்ளேன். புதிய மனிதராக உணர, முதலில் நான் நானாக உணரவேண்டும் என எண்ணுகிறேன்.
சிறுவயதில் உலகைப் புரட்டிப்போடும் அனைத்து ஆற்றலும் என்னுள் இருந்ததாக நினைத்தேன். காலப்போக்கில் அது மறையத் தொடங்கி இருந்தாலும், தற்சமயம் உலகைப் புரட்டிப்போடும் கடமை அனைவரின் வாழ்விலும் உள்ளது உண்மை.
பெரிய செய்கைகளை மட்டும் கருதாமல், வாழ்க்கைமுறையை, நிலைத்தன்மையைச் சுற்றி மாற்றியமைக்கும் எண்ணத்தை எனது நட்பு வட்டம் விதைத்துள்ளது. சிலர் நனிசைவத்துக்குத் திரும்பி உள்ளனர், சிலர் ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ ஆடைகள் வாங்குவதை நிறுத்தி உள்ளனர். இவ்வாறு அன்றாட பழக்கவழக்கங்களை இந்நோக்கத்துடன் மறுபரிசீலிக்கும் ஆண்டாக 2024 அமையும் என நம்புகிறேன்.
புத்தாண்டை ஒரு தேர்வாகக் கருதாமல், வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் பயணமாக அமைத்துக்கொள்வதே எனது விருப்பம்.
மனனம் செய்து தேர்ச்சி அடைவது குதிரைக் கொம்பு; புரிந்தும் உணர்ந்தும் படிக்கவேண்டும் என பள்ளிக்காலம் முழுக்க கூறப்பட்டது. அவ்வகையில் குறிக்கோள்கள் நிறைவடைய நம்மை நாமே புரிந்துகொள்வது அவசியம். 48 நாள்கள் தினமும் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்த பின்னர் அதனை பலமுறை நான் கைவிட்டேன். ஆனால், இப்படி எவ்வாறு விழுந்தாலும் எப்போதுமே எழுபவளாக இருக்க, இன்னும் ஆழமாக என்னைப் புரிந்துகொண்டு உள்ளுணர்வுகளுடன் தொடர்பில் இருக்கும் நோக்கில் இவ்வாண்டைச் செலுத்த இருக்கிறேன்.
போர், இனவாதம், பணவீக்கம், நோய் எனப் பலவற்றால் சோதனைக்குள்ளான நாம், நம்பிக்கையுடன் மீண்டெழுந்து புத்தாண்டைத் தொடங்க வாழ்த்துகள்.
Bio : விஷ்ணு வர்தினி தேசிய பல்கலைக்கழகத்தில் மெய்யியல், அரசியல், பொருளியல் (பிபிஇ) பயின்று வருகிறார். தமிழ் முரசில் தன்னார்வச் செய்தியாளராகவும் இயங்கி வருகிறார்.