குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் சஞ்சய் வாசு, உலகின் மிகத் திறமையான மாணவர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலன்டட் யூத்’ எனும் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் நடத்திவரும் சோதனைத் தேர்வில் வெற்றிபெற்றதன் மூலம் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் சஞ்சய்.
உலகளவில் 90 நாடுகளை சேர்ந்த 16,000 மாணவர்கள் கலந்துகொண்ட இத்தேர்வுகளில் திறம்பட செயல்பட்டு வென்றுள்ளார் இவர்.
குறிப்பாக கணிதத்தில், 12ஆம் வகுப்பு தரத்திலான பாடத்திட்ட தேர்வுகளில் இவர் ‘99 பெர்ஸன்ட்டைல்’ பெற்றார். அது கொடுத்த ஊக்கத்தினால், தற்போது பல்கலைக்கழக தரத்திலான நுண்கணிதம் பயின்று வருகிறார்.
சிறு வயதிலிருந்தே கணிதம், அறிவியல் பாடங்களில் ஈடுபாடு கொண்ட இவர், ‘சயின்ஸ் ஒலிம்பியாட்’ ஐசிஏஎஸ், ஏஎம்ஓ, எஸ்எம்கேசி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
படிப்பில் மட்டுமின்றி சதுரங்கம், டென்னிஸ் என விளையாட்டுகளிலும், பியானோ இசையிலும் அசத்தி வருகிறார். தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணங்களைக் குவித்து வருகிறார்.
சஞ்சய் குறித்துப் பேசிய தந்தை வாசு துரைசாமி, “சஞ்சய் சிறுவயதிலிருந்து இயல்பிலேயே கிரகிக்கும் திறன் மிக்கவராக இருந்தார். அதனால் அவரை ஊக்குவித்து அவருக்கு விருப்பமான அனைத்திலும் ஈடுபடுத்தினோம். இன்று அவர் பல்வேறு தளங்களில் தடம்பதித்து வாகை சூடுவதைக் காண பெருமையாக இருக்கிறது. அவர் மென்மேலும் வளர எங்கள் ஆதரவை கொடுத்துக்கொண்டே வருவோம்,” என்றார்.
சஞ்சயின் தாயார் மனோன்மணி, “எங்கள் முதல் பிள்ளை தொடர்புத்திறன் குறைபாட்டால் (ஆட்டிசம்) பாதிக்கப்பட்டவர் என்பதால் அவளால் பல நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அதற்கடுத்து பிறந்த என் மகன், பல துறைகளிலும் ஈடுபடுவதையும் வெல்வதையும் பார்க்க பூரிப்பாக இருக்கிறது. ஒரு தாயாராக நான் அடைய விரும்பியது இதுதான்,” என்றார்.
வீடு, பணி, குழந்தைகளின் பல்வேறு வகுப்புகள் என பம்பரமாகச் சுழலும் இந்த இணையர் நேர நிர்வாகம் குறித்து பேசியபோது, “பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய, அவர்களுக்கு பிடித்தவற்றைச் செய்ய ஊக்குவிப்பும் ஆதரவும் வழங்குவதை எங்கள் தலையாய கடமையாக கருதுகிறோம். அதற்காக நாங்கள் செய்யும் எதையும் தியாகம் என்றோ சமரசம் என்றோ கருதவில்லை. சரிவர பொறுப்புகளை பிரித்துக்கொண்டு செயல்படுவதால் நேர நிர்வாகம் சாத்தியமாகியுள்ளது,” என்றனர்.
தம் பெற்றோர் தங்களுக்காக செய்யும் அனைத்தையும் பார்த்து வியப்பதாகவும் அவர்களையே முன்மாதிரியாக கொண்டு சரியான முறையில் அட்டவணை போட்டு செயல்படுவது, தனக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்ய ஏதுவாக இருக்கிறது என்றார் சஞ்சய்.
தனது வெற்றிக்கு பெற்றோரும் ஆசிரியர்களும் துணைநிற்பதாகக் கூறிய இவர், எதிர்காலத்தில் நரம்பியல் மருத்துவம் அல்லது செயற்கை நுண்ணறிவு ஏதேனும் ஒன்றில் சாதனை புரிய வேண்டும் என்ற இலக்கை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பதாக சொன்னார்.