காவடி ஆட்டம், அலகு குத்துதல், பால்குடம் தூக்குதல், தேர் இழுத்தல் எனப் பல்வேறு நேர்த்திக்கடன்களை தைப்பூசத் திருவிழாவில் நிறைவேற்றுவோரிடையே இளையர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பதைக் காண முடிகிறது.
அதில் ஒருவர்தான் பாலகிருஷ்ணன் ரிஷி, 20. முழுநேர தேசிய சேவையாளராக இருக்கும் இவர், கடந்த ஏழு வருடங்களாகத் தன் குடும்பத்தோடு தைப்பூசத்தில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த ஆண்டு தன்னுடைய தாயார் அலகு குத்திக்கொள்வதாகவும் ரிஷி மற்றும் அவர் தந்தை பால்குடம் தூக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தைப்பூசத்தில் பங்கேற்பதால் வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுகிறது என்றும் குடும்பப் பிணைப்பு வலுபெறுகிறது என்றும் கூறுகிறார் ரிஷி.
இவர் பால்குடத்தை முன்கூட்டியே தயார் செய்துவிடுவதால் மற்றவர்களுக்கும் பால்குடங்களைத் தயார் செய்ய உதவிவருகிறார். இதனால் புது நண்பர்கள் கிடைப்பதாகக் கூறினார் ரிஷி.
நண்பர்கள் தீமிதியில் ஈடுபட்டதை அடுத்து இந்த ஆண்டு முதல்முதலாகத் தைப்பூசத்தில் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் ஊக்கத்தைப் பெற்றுள்ளார் பழனிச்சாமி பரணிதரன், 20.
இந்தப் பங்கேற்பு மூலம் ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் பரணி, தமிழ் இளையர்களிடையே தமிழ் மீதான பற்றையும் தமிழர் கலாசாரம் தொடர்பான விழிப்புணர்வையும் வளர்க்க தைப்பூசம் கைகொடுப்பதாகக் குறிப்பிட்டார்.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் இத்திருவிழாவுக்குச் செல்லும் இளையர்கள், அந்தப் பெரியவர்களிடமிருந்து தமிழர் மரபுகளையும் கற்றுக் கொள்கிறார்கள் என்று இவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக செல்வம் யாழினி, 21, தைப்பூசத்தில் கலந்துகொள்வதாகக் கூறினார். இவ்வாண்டு பால்குடம் தூக்கவிருக்கும் இவரின் குடும்பத்தார், இந்த மாதம் முழுவதும் சைவ உணவை உட்கொண்டு வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர்.
பால்குடம் தூக்குவோரில் சிலர் தொண்டூழியத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதாக யாழினி குறிப்பிட்டார்.
இளம் தலைமுறைக்குக் குடும்பப் பிணைப்பின் முக்கியத்துவத்தையும் மன வலிமையையும் கற்றுத் தரும் வகையில் தைப்பூசத் திருவிழா விளங்குகிறது.
- யாழினி கமலக்கண்ணன், 17, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னணுப் பொறியியல் துறையில் முதலாம் ஆண்டு மாணவி