‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. தமிழர்களுக்கு நம்பிக்கை உரமிடும் பொன்மொழியும்கூட.
அக்காலத்தில் மார்கழி மாதத்தில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும் என்பதால் உழவர்க் கைகளில் தை மாதம் பணம் தவழும். அதனால், திருமணம் போன்ற சுபச் செலவுகளை அவர்களால் சமாளித்து இன்புறவும் முடியும்.
எனவேதான், பழங்காலந்தொட்டே தமிழர்கள் தை மாதத்தை முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
குறிப்பாக, தைப்பூசம், பொங்கல் போன்ற கொண்டாட்டங்கள் தை மாதத்தில் இடம்பெறுகின்றன.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனச் சான்றோர் கூறுவதற்கு ஏற்ப, போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது பொங்கல்.
பழைய சாமான்களைத் துறந்து, புதிய பொருள்களை வாங்குவது வழக்கம்.
உழவர்த் திருநாளாகக் கருதப்படும் பொங்கல் பண்டிகை, அறுவடையையும் அறுவடை சார்ந்தவற்றையும் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
இதனாலேயே நாம் பொங்கல் பண்டிகைக்கு அடி மண்ணில் விளையும் காய்கறிகளைச் சமைக்கிறோம்.
முக்கியமாக, பொங்கல் திருநாளன்று குடும்பத்தாருடன் கொண்டாடுவதும் தேக்கா போன்ற இடங்களில் உள்ள சந்தையை வலம்வருவதும் பண்டிகை உணர்வை ஊட்டுகின்றன.
சிறுவயதிலிருந்தே தைப்பூசம், பொங்கல் போன்ற முக்கியக் கொண்டாட்டங்களில் நான் பங்கேற்று மகிழ்கிறேன்.
இன்று 18 வயதிலும் அந்தக் கொண்டாட்ட உணர்வில் நான் லயித்துவிடுகிறேன்.
மேலும், நம் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்க இதுபோன்ற பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ஒரு நினைவுறுத்தலாக உள்ளன என நான் நம்புகிறேன்.
ஷ்ரேயாஸ் ரவி, 14,
ராஃபிள்ஸ் கல்வி நிலையம்