இளம் வயதில் தன்னுடைய தந்தை விமானங்கள் புறப்படுவதைக் காண்பிப்பதற்காக சாங்கி கடற்கரைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தது தனக்குள் விமானங்கள் மீதான ஆர்வத்தைத் தூண்டியது என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் விமானப் படைப் பொறியாளரான கிஷோர் நிக்கோலஸ், 30.
“புவியீர்ப்பு விசையைத் தாண்டி கம்பீரமாக வானில் மிதக்கும் விமானங்கள் பற்றிய தகவல்களை அந்தச் சிறு வயதிலிருந்தே தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பின்னாளில், அதுவே என் வாழ்க்கைத் தொழிலாக மாறியதில் எனக்கோ என் குடும்பத்திற்கோ எவ்வித ஆச்சரியமும் இல்லை. அந்த அளவிற்கு இத்துறையின் மீது ஈடுபாட்டுடன் இருந்தேன்,” என்று புன்னகை பூத்தார் கிஷோர்.
‘ஓ’ நிலை படிப்பிற்குப் பின் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் படிப்பை மேற்கொண்ட இவர், தொடர்ந்து பல்கலைக்கழகத்திலும் விமானக் கட்டமைப்புப் பொறியியல் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.
படிப்பை முடித்தபின் தான் எட்டு மாதகாலம் எஸ்ஐஏ இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலைப்பயிற்சியில் ஈடுபட்டது இப்பணி குறித்த புரிதலை மேம்படுத்தியதோடு தொழில்நுட்ப ரீதியாக பல புதிய நுட்பங்களைக் கற்க உதவியதாகவும் கிஷோர் தெரிவித்தார்.
அதன்பின் விமானப்படையில் இணைந்த கிஷோர், “ஒவ்வொரு நாளுமே இங்கு புதுமையை உணர்கிறேன். புதுவித அனுபவங்கள், புத்தாக்க கற்றல் என ஒரு நாள் கடந்து செல்வதே தெரியாத அளவிற்கு ஆர்வமூட்டும் பலவற்றைக் கற்றுக்கொள்கிறேன்,” என்றும் கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டாக விமானப்படையில் இருக்கும் கிஷோர், பணியிடத்தில் குழுவுடன் இணைந்து உருவாக்கும் திட்ட நடவடிக்கைகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார். அண்மையில் எந்திரவியல் சார்ந்த குழுப் போட்டி ஒன்றில் இறுதிவரை மனம் துவளாமல் பங்குகொண்டது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்தார் இவர். இதுபோன்ற அனுபவங்கள் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வண்ணம் அமைகிறது என்றும் இவர் பகிர்ந்துகொண்டார்.
பணி அல்லாமல் காற்பந்து விளையாடுவதிலும் உடற்பயிற்சி செய்வதிலும் அதிக நாட்டம் உள்ள கிஷோர், “பொதுவாகவே மனநிலையைச் சீராக வைத்துக் கொள்ள உடல்நிலை மேம்பாடு அவசியமானது. அன்றாடம் அதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். என் உற்சாகத்திற்கு அதுவே காரணம் என்றும் நினைக்கிறன்,” என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தொடர்ந்து விமானப்படையில் பணியாற்றி தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்புவதாகவும் பல வசதிகளையும் கொண்ட இந்நாட்டின் குடிமகனாக அதைத் தன் கடமையாகக் கருதுவதாகவும் முனைப்புடன் தெரிவித்தார் கிஷோர்.