அனைத்துலக உபகாரச் சம்பளத்திற்குத் தகுதிபெற்றதன் மூலம் சிங்கப்பூருக்குப் படிக்க வந்த ராகுல் ராஜு, 22, தனது வேலைப் பயிற்சித் திட்டம் முடியும் முன்னரே ‘எஸ்எம்ஆர்டி’ போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு முழுநேரப் பணியை உறுதிசெய்துவிட்டார்.
தற்போது தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் இவர், வேலைப் பயிற்சி முடிவடைவதற்குமுன் நிறுவனத்தில் முழுநேர வேலையைத் தக்கவைத்துக்கொண்ட முதல் மாணவர் எனும் பெருமைக்குரியவர்.
வேலைப் பயிற்சி முடிவுற இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ராகுல் அதில் கிடைத்த செறிவூட்டும் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
மின்னணுவியல் துறையில் பட்டயம் பெறவிருக்கும் ராகுல், எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வு, பொறியியல் ஆகிய அம்சங்களில் முழுமையான பயிற்சி பெற்றுள்ளார்.
நிறுவனத்தின் வேலைப் பயிற்சி திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், தனக்கு அங்கு ஒரு முழுநேரப் பணி அமையும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
திட்ட நிர்வாகம், தொடர்புத் திறன் போன்ற மென்திறன்களையும் தான் கற்றுக்கொண்டதாகக் கூறிய ராகுல், “எனது மதிப்பெண்கள் சிறப்பாக இருந்ததால் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் வேலைப் பயிற்சிக்கு நான் தேர்தெடுக்கப்பட்டிருந்தாலும் பட்டயக் கல்வி முடியும்வரை நான் இந்த மதிப்பெண்களைக் கட்டிக்காக்க வேண்டும்,” என்றார்.
இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து வந்துள்ள ராகுலுக்கு, சிங்கப்பூர் கல்வி அமைப்பு பெருமளவில் பிடித்துள்ளது.
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றும் இதர ஊழியர்கள் தனக்கு தந்த வழிகாட்டுதல் மூலம் தன்னால் வேலையில் அடங்கியுள்ள சவால்களைக் கையாள முடிந்ததாக தெரிவித்தார் ராகுல்.
“எனது எதிர்காலத்தை நன்றாக அமைத்துக்கொள்ள இந்த வேலைப் பயிற்சி கைகொடுத்து வருகிறது. ஓராண்டு பயிற்சி என்பதால் என்னால் பல பிரிவுகளில் அடங்கியிருக்கும் வேலை அம்சங்களை அறிந்திட முடிந்தது. அதன் பிறகு எனது ஆர்வம் இதில் உள்ளது என்பதை அறிய வைத்தது இந்தப் பயிற்சி,” என்றார்.
மே மாதத்தில் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவில் முழுநேரப் பணி தொடங்கவிருக்கும் ராகுல், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
ஓராண்டு வேலை அனுபவம் பெற்ற பின்னர் பகுதிநேரமாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அல்லது நன்யாங் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்புகிறார் இவர்.