சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக இவ்வாண்டு மே 15ஆம் தேதி திரு லாரன்ஸ் வோங் பதவியேற்றார்.
எந்த நாட்டிலும் தலைமைத்துவ மாற்றம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க தருணமாகும்.
அதன் தொடர்பாக இளையர்கள் சிலர் தங்கள் கருத்துகளையும் வருங்கால சிங்கப்பூர் குறித்த தங்களது எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.
“மாணவர்களுக்கு மன அழுத்தம் அளிக்காத ஒரு கல்வித் திட்டத்தைப் புதிய பிரதமர் படிப்படியாக நடைமுறைப்படுத்த வாய்ப்புண்டு,” என்றார் பீட்டி உயர்நிலைப்பள்ளி மாணவி வி. ஸ்ரீரியா ஸ்ரீ, 15.
“இளையர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்குக் கூடுதல் ஆதரவு அளிக்கப்பட வேண்டும்,” என்றார் சி.எச்.ஐ.ஜே. காத்தோங் கான்வெண்ட் உயர்நிலைப்பள்ளி மாணவர் முருகானந்தம் புகழினி, 14.
“விலைவாசி அதிகரித்துக்கொண்டே இருப்பதால், சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து பலவகையில் ஆதரவு அளித்தால் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க உதவியாக இருக்கும்,” என்றார் பீட்டி உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெயபாரதி, 15.
“தாய்மொழியை அவ்வளவாகக் கண்டுகொள்ளாத இக்காலத்தில், மாணவர்கள் அதை விரும்பி, பற்றுடன் படிப்பதற்குக் கல்வித்திட்டத்தில் மாற்றங்கள் சேர்க்கப்படலாம்,” என்றார் நேவல் பேஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர் முருகன் தயாநிதி, 15.
“சிங்கப்பூர் சிறிய நாடு எனினும் அதை மேலும் ஒரு பசுமையான நாடாக மாற்றும் திட்டங்களை பிரதமர் லாரன்ஸ் வோங் கொண்டுவரக்கூடும்,” என்று பீட்டி உயர்நிலைப் பள்ளி மாணவி ஷிரின் ஹர்சானா ஹிதாயட்டுள்ளா, 15, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரில் படிக்கும் மாணவர்கள் வேலை கிடைக்காமல் மற்ற நாடுகளுக்குச் செல்வதைக் குறைப்பதற்குச் சிங்கப்பூரிலேயே வேலைக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கலாம்,” என்றார் புக்கிட் வியூ உயர்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் ராகஸ்ரீ, 15.
“இளையர்கள் தங்கள் தாய்மொழியில் பேச ஊக்குவிப்பதற்கு அவர்கள் பள்ளியில் மேலும் பல தாய்மொழி சார்ந்த குழுக்களை அல்லது அமைப்புகளை உருவாக்கலாம்,” என்று ஆலோசனை கூறினார் பீட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர் 15 வயது கவியரசன் சத்தியநிஷாத்.

